பழங்குடி மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எப்ஐஆர் பதிவு..!
பழங்குடி மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது கிங்டம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி, நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்றிருந்தார். அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, முதலில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்கவரும் அழகில் பிரியங்கா மோகன்..! கருப்பு நிற சேலையில் க்யூட் கிளிக்..!
பின்னர், "காஷ்மீர் மக்கள் நம்மைப் போன்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'குஷி' படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அவர்களுடன் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றன. தனது சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தானால் கவனித்துக் கொள்ள முடியவில்லை. அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். அவர்கள் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல், 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என கூறினார்.
அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் விஜய் தேவர கொண்டாவின் பேச்சு தங்களுடைய சமூகத்தினரை தாழ்த்தி பேசியது போல் உள்ளது என்று அப்போது ஒருவர் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பது போல் விஜய் தேவரகொண்டா ஒரு விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த பழங்குடியினர் சமூக கூட்டமைப்பு சங்கத் தலைவர் நேனாவத் அசோக் குமார் நாயக் ஐதராபாத் அருகே உள்ள ராயதுர்கம் காவல் நிலையத்தில் விஜய் தேவரகொண்டா மீது அதே பேச்சுக்காக மீண்டும் ஒரு புகாரை பதிவு செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விஜய் தேவரகொண்டா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தக் லைஃப்": சிம்புவின் இன்ட்ரோ வீடியோ சாங் ரிலீஸ்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!