Women Empowerment-ல அடி பின்னிட்டாங்க..!! படத்துல ஆக்ஷன் இல்ல.. ஆக்ஷன்ல தான் படமே - பிளாஸ்ட் திரை விமர்சனம்..!
நடிகர் அர்ஜுனின் பிளாஸ்ட் பட திரை விமர்சனம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. குறிப்பாக குடும்ப உணர்வுகளையும் அதிரடி காட்சிகளையும் இணைத்து சொல்லப்படும் கதைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘பிளாஸ்ட்’. ஆக்ஷன் கிங் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அதிரடி, குடும்ப உணர்வு, பெண்கள் அதிகாரம் மற்றும் சமூக கருத்துக்களை ஒன்றாக இணைத்து சொல்ல முயன்றுள்ள இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
திரைப்படத்தின் கதை கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுனைச் சுற்றி நகர்கிறது. சிறு வயதிலிருந்தே தனது மகளான ப்ரீத்தி முகுந்தனை துணிச்சலான பெண்ணாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவருக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். “ஒரு பெண் எப்போதும் யாருடைய உதவியையும் நாடாமல் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்” என்ற கருத்தை தொடர்ந்து மகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார். தன்னுடைய குடும்பத்தினருக்கு மட்டும் அல்லாமல், எங்கு யாருக்கு அநீதி நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
தந்தையின் இந்த வளர்ப்பு காரணமாக, ப்ரீத்தி முகுந்தன் எந்த தவறையும் கண்டும் காணாமல் செல்லாமல் நேரடியாக எதிர்த்து நிற்கும் குணம் கொண்டவராக மாறுகிறார். பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களை எதிர்த்து தைரியமாக போராடுகிறார். இதனால் பல பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கிறார். தனது மகள் இந்த அளவுக்கு தைரியமாக வளர்ந்திருப்பதை பார்த்து பெருமைப்படும் அர்ஜுன் ஒருபுறம் இருந்தாலும், “ஒருநாள் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்வாரோ?” என்ற அச்சத்தில் வாழ்கிறார் அபிராமி.
இதையும் படிங்க: சனாதனம் வேண்டாமா.. அப்ப தயவு செய்து வெளியேபோயிடுங்க..!! கடுப்பில் பேசிய நடிகர் அர்ஜுன்..!
இவர்களின் குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம் நகரும் நிலையில், மறுபுறம் மிகப்பெரிய அரசியல் மற்றும் பண மோசடி பின்னணி கொண்ட கதையும் இணைகிறது. ஒரு வில்லன் கூட்டம் விலை உயர்ந்த கனிமங்களை எடுப்பதற்காக ஒரு கிராமத்தையே அழிக்க திட்டமிடுகிறது. இதற்காக ஒரு அமைச்சரிடம் அனுமதி பெற முயற்சிக்கிறார்கள். அந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.7,000 கோடி என்றும், அதில் ரூ.1,000 கோடி தமக்குக் கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் பேரம் பேசுகிறார். அந்த பணத்தை ஒரு முக்கிய நபரிடம் ஒப்படைக்கிறார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக அந்த பணம் அமைச்சரிடம் சேராமல் போகிறது. இதன் காரணமாக அர்ஜுனின் குடும்பம் அந்த பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது, அவர்கள் எப்படி அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதையே படம் அதிரடி திரைக்கதையுடன் சொல்லுகிறது.
படத்தின் பெயர் ‘பிளாஸ்ட்’ என்பதுபோலவே, தொடக்கம் முதல் இறுதி வரை சண்டை காட்சிகள் வெடித்துச் சிதறுகின்றன. ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். பெரும்பாலான ஆக்ஷன் படங்களில் ஒரே மாதிரியான சண்டை காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி ஒரு உணர்வு ஏற்படாத வகையில் ஒவ்வொரு சண்டையையும் வேறுபட்ட முறையில் உருவாக்கியுள்ளனர்.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் முதல் படத்திலேயே குடும்பம் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையை தேர்வு செய்து, அதை விறுவிறுப்பாக சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் சில இடங்களில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி முழுவதும் அதிரடி மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகளால் ரசிகர்களை ஈர்க்கிறது. வசனங்கள், கதாபாத்திர வடிவமைப்பு, கேமரா மூவ்மென்ட்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் குறித்து தனியாக சொல்ல தேவையில்லை. 46 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கும் அவர், இந்தப் படத்திலும் தனது முழு உழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். கராத்தே மாஸ்டராக அவர் நடித்திருக்கும் விதம் ரசிகர்களை கவர்கிறது. வயதை மறந்து பல கடினமான சண்டை காட்சிகளில் நடித்திருப்பது பாராட்டத்தக்கது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் என்றால் அது ப்ரீத்தி முகுந்தன் தான். இதற்கு முன்பு பாடல் மற்றும் கவர்ச்சி தோற்றம் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்த அவர், இந்தப் படத்தில் முழுமையான ஆக்ஷன் நடிகையாக மாறியுள்ளார். பல சண்டை காட்சிகளில் அர்ஜுனுக்கு இணையாக நடித்திருப்பதால், ரசிகர்கள் அவரை “ஆக்ஷன் பிரின்சஸ்” என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
அதேபோல் நடிகை அபிராமியும் படத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார். ‘விருமாண்டி’ படத்தில் பார்த்த அபிராமி தானா இது என்று கேட்கும் அளவுக்கு உடல் எடையை குறைத்து ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். ஒரு தாயின் அச்சமும், குடும்பத்தை காப்பாற்றும் உறுதியும் அவரது நடிப்பில் நன்றாக வெளிப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் சிதம்பரமும் இந்தப் படத்தில் கவனம் ஈர்க்கிறார். ‘பொன்னியின் செல்வன்’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்களுக்குப் பிறகு, அவரது திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று சொல்லலாம். ஆக்ஷனை தாண்டி இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் பெண்கள் அதிகாரம் குறித்து பேசும் விதம் தான். பெண்கள் எதிர்கொள்ளும் பணியிட துன்புறுத்தலை ப்ரீத்தி முகுந்தன் எதிர்கொள்ளும் காட்சிகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
“நமக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் அல்ல, யாருக்காவது அநீதி நடந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்” என்ற கருத்தையும் படம் வலுவாக பதிவு செய்கிறது. ரவி பஸ்ரூரின் பின்னணி இசை பல இடங்களில் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சில இடங்களில் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்றாலும், மொத்தத்தில் இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக வேலை செய்துள்ளன.
மொத்தத்தில் பார்த்தால், ‘பிளாஸ்ட்’ ஒரு முழுமையான குடும்ப ஆக்ஷன் டிராமா. ஆக்ஷன் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும். குடும்ப உணர்வு, பெண்கள் அதிகாரம் மற்றும் அதிரடி ஆகிய மூன்றையும் இணைத்து ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாக ‘பிளாஸ்ட்’ அமைந்துள்ளது. சில இடங்களில் ஆக்ஷன் அதிகமாக இருப்பதால் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் படம் முழுமையாக கனெக்ட் ஆகுமா என்பது மட்டும் கேள்வியாக இருந்தாலும், மொத்தத்தில் இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம் பெயருக்கு ஏற்றபடி திரையில் வெடித்து சிதறுகிறது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: 'பசங்க 3' படத்துக்கு கதை ரெடி.. 3 பசங்களும் ரெடி..!! ஆனா.. இதில் தான் குழப்பமே.. இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்..!