பல தடைகளை தாண்டி வெளியான சூர்யாவின் 'கருப்பு'..!! படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!
சூர்யாவின் 'கருப்பு' படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கருப்பு திரைப்படம், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி பிரச்சனைகளால் நேற்று வெளியாகாமல் போன நிலையில், இன்று வெற்றிகரமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரமாக சமூக வலைதளங்களிலும் திரையுலக வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், தற்போது சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், நீதிமன்ற வழக்கு பின்னணியையும், அதனுடன் இணைந்துள்ள கடவுள் நம்பிக்கைகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நட்டி நட்ராஜ், சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானபோதே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக சூர்யாவின் மாஸ் தோற்றமும், நீதிமன்ற பின்னணியில் அமைந்த கதையும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.
இதையும் படிங்க: ’கருப்பு' திரைப்பட டைட்டில் கார்டில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெயர்..! தியேட்டரில் பறந்த விசில் சித்தம்.. அதகளப்படுத்திய ரசிகர்கள்..!
குறிப்பாக சூர்யா ரசிகர்கள் கருப்பு சட்டை அணிந்து திரையரங்குகளுக்கு வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, நேற்று அதிகாலை முதலே பல இடங்களில் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு கூடியிருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி தொடர்பான பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை என்ற தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டதால், பலர் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
இந்த திடீர் பிரச்சனை படக்குழுவினரையும் கடுமையாக பாதித்தது. குறிப்பாக இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர் கண்கலங்கியபடி பேசுவது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது. “பல வருட உழைப்பின் பலன் கடைசி நேரத்தில் நின்றுவிடக்கூடாது” என்ற அவரது உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ‘கருப்பு’ படத்திற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் அனைத்து நிதி பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர், படம் இன்று காலை முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இன்று காலை முதல் ‘கருப்பு’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. குறிப்பாக ரோகினி தியேட்டர் திரையரங்கில் காலை 9 மணிக்கு நடைபெற்ற முதல் காட்சி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் தொடங்கியது.
இந்த சிறப்பு காட்சியை நடிகை திரிஷா, இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ரசிகர்களுடன் இணைந்து பார்த்து ரசித்தனர். மேலும் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி கூட அங்கு கலந்து கொண்டார். திரையரங்கில் ரசிகர்கள் ஆரவாரமாக சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில், நடிகர் கமல் ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘கருப்பு’ திரைப்பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது பதிவில், “தம்பி சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். கமல் ஹாசனின் இந்த பதிவு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரையுலகில் மூத்த நடிகராக இருக்கும் அவர், இளம் தலைமுறை நடிகர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மொத்தத்தில், நேற்று ஏற்பட்ட ஏமாற்றத்தை தாண்டி இன்று ‘கருப்பு’ திரைப்படம் வெற்றிகரமாக வெளியானது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறப்போகிறது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது குறித்து திரையுலக வட்டாரங்களில் பெரும் ஆர்வம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: இந்த வயசுல ஜாலியா இருங்கப்பா.. வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க..!! "கருப்பு" பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு..!