×
 

ஆடிப்பூரம் 2026: அன்னையின் அருளும் ஆண்டாளின் அவதாரமும்..!! தெரிந்துகொள்ளுங்கள்..!!

இதே நாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார்.

தமிழ்நாட்டின் மரபுகளில் ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டிற்குரிய சிறப்பு காலமாகக் கருதப்படுகிறது. அந்த மாதத்தில் பூரம் நட்சத்திரம் வரும் நாளை ஆடிப்பூரம் எனக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை (நாளை) அந்த புனித நாள் வருகிறது. உலக நன்மைக்காக உமா தேவி அவதரித்த நாளாகப் புராணங்கள் கூறும் இந்நாள், தேவிக்குரிய விழாவாகவும் ஆண்டாள் நாச்சியாரின் ஜெயந்தியாகவும் இரு மரபுகளிலும் போற்றப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, உலகைக் காக்கும் அன்னைக்கு ஆலயங்களில் பத்து நாள் திருவிழாவாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. அம்மன் கோயில்களில் அன்னைக்கு வண்ண வண்ண கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் அவை பெண் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அந்த வளையல்களை அணிந்துகொண்டால் மனம் போல் வாழ்க்கை அமையும், மங்கலம் நிலைத்திருக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. 

திருமணம் தடைபட்டோர் அம்மனுக்கு கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, புடவை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் தங்கள் தவத்தைத் தொடங்கும் நாளாகவும் இது குறிப்பிடப்படுகிறது. இதே நாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் அவதரித்தார்.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (13-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஆழ்ந்த உணர்வுகள் பலன் தரும்..!!

திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட அவர், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களை அருளினார். பெருமாளுக்குச் சாற்றப்படும் மாலையை முன்பே அணிந்து பார்த்ததால் பெரியாழ்வார் கோபமடைந்தார். ஆனால் கனவில் தோன்றிய பெருமாள், “ஆண்டாள் சூடிய மாலையையே எனக்குத் தரவேண்டும்” எனக் கட்டளையிட்டார். பின்னர் திருவரங்கத்தில் அரங்கநாதரிடம் ஒளியாகக் கலந்தார். 

வைணவத் தலங்களில் ஆண்டாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். திருமணமாகாத பெண்கள் வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரத்தன்று அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. இயலாதவர்கள் வீட்டுப் பூஜையறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு வளையல், பட்டுப்புடவை சாற்றி நெய் விளக்கேற்றி வழிபடலாம். 

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேர் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்னையின் அருளும் ஆண்டாளின் பக்தியும் இந்நாளில் அனைவருக்கும் மங்கலத்தை வழங்கட்டும்.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (12-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share