×
 

களைகட்டப்போகும் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..!! முன்பதிவு தொடக்கம் எப்போது தெரியுமா..??

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. வருகிற ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, 30-ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை (சித்திரை 15) அன்று கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாணத்தை காண இரு வகையான கட்டண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரூ.500 மற்றும் ரூ.200 மதிப்பிலான இந்த சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி இரவு 9 மணி வரை கோவில் அதிகாரப்பூர்வ இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் கிடைக்கும்.

ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு ரூ.500 சீட்டுகளையும், மூன்று ரூ.200 சீட்டுகளையும் மட்டுமே பெற முடியும். மேலும், ஒரே நபர் இரு வகை சீட்டுகளையும் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியாது. பதிவின்போது பிறந்த தேதியை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு அலைபேசி எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக திருக்கல்யாண நாளில் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (16-04-2026)..!! இந்த ராசிக்கு இன்று அன்பு உறவுகளில் புதிய உற்சாகம் தோன்றும்..!!

இணையம் வழியாக முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நேரடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் நேரில் வந்து பதிவு செய்யலாம். இதற்கு ஆதார் அட்டை நகல், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை அவசியம்.

முன்பதிவு செய்தவர்களில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஏப்ரல் 23-ம் தேதி அவர்களது அலைபேசி மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தேர்வு பெற்றவர்கள் ஏப்ரல் 24 முதல் 27 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை யாத்ரி நிவாஸில் வந்து எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.500 கட்டண சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகிலுள்ள வழியாகவும், ரூ.200 சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு-கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாகவும் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். கட்டண சீட்டு பெற்ற பக்தர்கள் திருக்கல்யாண நாளான 28-ம் தேதி காலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து திருக்கல்யாணத்தை காணலாம்.

கட்டணம் செலுத்தாத பக்தர்கள் முதல் வரிசையில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: சத்துக்களின் களஞ்சியம்: விளைச்சல் பாதிப்பால் பிஸ்தா விலை கிடுகிடு உயர்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share