விண்ணை பிளந்த பக்தர்களின் கோஷம்..!! சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..!!
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இந்த காலகட்டத்தில் அம்மன் தானாகவே கடும் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களுக்காக தன்னை வருத்திக்கொள்வது மரபு. இந்நாட்களில் அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே அம்மனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இவ்விழாவின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை அணிந்து, கடும் விரதம் இருந்து பயணம் செய்கின்றனர். கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி, அலகு குத்துதல், காவடி எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றை எடுத்து வந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு 2026: 12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்..!! புதிய ஆண்டில் வெற்றி, செல்வம், ஆரோக்கியம்..!!
இதன் தொடர்ச்சியாக சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும் அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேளதாளங்கள் ஒலிக்க, மாரியம்மன் படம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். இரவில் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் ‘வையாளி கண்டருளும்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (14.04.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. மேல் அம்மன் தேரில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஆடி அசைந்து வரும் மாரியம்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தேருக்கு முன்னால் பக்தர்கள் கரகம், முளைப்பாரி, அலகு குத்துதல், பறவைக் காவடி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் திரளாக குவிந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோயில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (13-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தலைமைப் பண்பு முன்னுக்கு வரும்..!!