தி.மலை கோயிலுக்கு போறீங்களா..?? செப்.1ம் தேதி முதல் புது ரூல்ஸ்..!! என்ன தெரியுமா..??
இந்த தடை தமிழகத்தின் முக்கிய கோயில்கள் அனைத்திலும் அமல்படுத்தப்படும் பொதுவான உத்தரவின் ஒரு பகுதியாகும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த அக்னி ஸ்தலத்தில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கானோரையும் ஈர்க்கும் புனிதத் தலமாகும்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின் அடிப்படையில், கோயிலின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், கருவறையில் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் பக்தர்களிடையே சர்ச்சையையும், ஆன்மீகச் சூழலுக்கு இடையூறையும் ஏற்படுத்துவதாக கோயில் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கோயில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் செப்டம்பர் 1 முதல் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. எனவே, செல்போன் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (19-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் நட்பு அடிப்படையிலான உறவு வலுப்படும்..!!
பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் ஐந்து பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு ராஜகோபுரம் அருகே இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே ஒரு இடத்திலும் இவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடிந்தபின் டோக்கனைக் காட்டி செல்போனைத் திரும்பப் பெறலாம்.
இந்த உத்தரவை மீறி மறைமுகமாக செல்போன் எடுத்துச் செல்பவர்களின் கருவிகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த தடை தமிழகத்தின் முக்கிய கோயில்கள் அனைத்திலும் அமல்படுத்தப்படும் பொதுவான உத்தரவின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் கோயில்களின் ஆன்மீகச் சூழல் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (18-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலகத்தில் முன்னேற்றம் உண்டு...!!