ஆடி கடைசி வெள்ளி..!! இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தொடக்கம்..!!
சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், தென் தமிழகத்தின் முக்கிய சக்தி வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வைப்பாறு மற்றும் அர்ச்சுனா ஆறு ஆகிய இரண்டு புனித நதிகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அருள் பெறுகின்றனர்.
ஆடி, தை, பங்குனி, சித்திரை மாதங்கள் இங்கு சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த காலமாகக் கருதப்படுவதால், இந்த மாதம் முழுவதும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடும்பங்களுடன் வரும் பக்தர்கள், விரதமிருந்து அக்னி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை ஏந்தி, அலகு குத்தி, முடி காணிக்கை செலுத்தி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகிறது. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா ஒரு வார காலம் கோலாகலமாக அமைகிறது. அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கியத் தெருக்களில் வலம் வந்து அருள்பாலிப்பார். இந்த ஆண்டுக்கான திருவிழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்குப் பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. பின்னர் சிவாச்சாரியார்கள் கொடிக்கம்பத்தில் சிறப்புப் பூஜைகள் செய்து திருவிழாக் கொடியை ஏற்றினர். இந்நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி, திருக்கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், அறங்காவலர் உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, அப்பனேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர். இத்திருவிழா வரும் நாட்களில் மேலும் விமரிசையாக நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ஆடி கிருத்திகை: வெற்றிவேல் முருகனுக்கு "அரோகரா"..!! வள்ளிமலை கோவிலில் காவடி சுமந்த பக்தர்கள்..!!