எகிறியது பாப்கார்ன் விற்பனை..!! இறக்குமதியை குறைக்க.. உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி அதிகரிப்பு..!!
நாடு முழுவதும் மக்காச்சோளத்தின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.
இளம் தலைமுறையினரின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மக்காச்சோள உற்பத்தியை பெருமளவு உயர்த்தியுள்ளது. தற்போது இந்தியாவின் இளம் சமூகம் சாட், பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளையே அதிகம் விரும்புகிறது. பெரும்பாலான இளைஞர்களின் இரவு உணவு இத்தகைய உணவுகளாகவே இருக்கிறது.
ஆனால், இவற்றுடன் இணைந்து பாப்கார்ன் மீதான விருப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் சினிமா இடைவேளையின்போது பாப்கார்ன் விற்பனை அமோகமாக நடைபெறுவது இதற்கு சிறந்த உதாரணம். திரைப்படப் பார்வையாளர்கள் மட்டுமின்றி, வீடுகள், பார்ட்டிகள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் பாப்கார்ன் சிற்றுண்டியாக பிரபலமாகி வருகிறது.
இந்தப் போக்கால் நாடு முழுவதும் மக்காச்சோளத்தின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்காச்சோள உற்பத்தி வெறும் 50,000 டன்னாக மட்டுமே இருந்தது. அப்போது உள்நாட்டு உற்பத்தி போதாததால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (27-03-2026)..!! இந்த ராசிக்காரர்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்.. வெற்றி நிச்சயம்..!!
இந்நிலையை மாற்றும் வகையில், இந்திய அரசு மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் விளைச்சல் ரகங்கள், நவீன விவசாய முறைகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் உற்பத்தி பெருமளவு உயர்ந்துள்ளது.
இதன் பலனாக, 2025-26 ஆம் ஆண்டில் நாட்டின் மக்காச்சோள உற்பத்தி 1,30,000 டன்னாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி 1,80,000 டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) தெரிவித்துள்ளபடி, இந்த உற்பத்தி அதிகரிப்பு தொடர்ந்தால் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்காச்சோளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 810 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலவாணியை சேமிக்க முடியும் என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மக்காச்சோள உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது. துரித உணவுப் பழக்கத்தால் உருவான தேவை, இறுதியில் உள்நாட்டு விவசாயத்தை வலிமைப்படுத்தும் நல்ல மாற்றாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவில்: ராம நவமி விழா கோலாகல தொடக்கம்..!! ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம்..!!