×
 

இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

பெங்களூரில் உள்ள ரெஸ்டாரண்ட்டுகளில் புதிய விதிமுறை ஒன்று அமலுக்கு வரவுள்ளது.

பெங்களூரு நகரின் பரபரப்பான வாழ்க்கையில், டீ அல்லது காபி ஒரு கப் வாங்கி, சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடனோ, சக ஊழியர்களுடனோ, காதலர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ மணிக்கணக்கில் அரட்டை அடித்து நேரம் செலவிடுவது பலரது வழக்கமாக மாறியுள்ளது. 

குறிப்பாக ஐடி ஊழியர்கள் அதிகம் காணப்படும் இந்நகரில், லேப்டாப் எடுத்து வந்து கேஃபேக்களை அலுவலகமாகவே மாற்றி வேலை செய்பவர்களும் குறைவில்லை. ஆனால் இந்தப் பழக்கம், ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிறிய ஆர்டருக்கு மட்டுமே வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் இருக்கைகளை ஆக்கிரமித்து வைத்திருப்பதால், புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கை கிடைப்பது கடினமாகிறது.

உச்ச நேரங்களில் கடைகள் நிரம்பி வழியும் நிலையில், இது வருவாய் இழப்பையும் ஏற்படுத்துகிறது. ஊழியர்களால் "எழுந்து செல்லுங்கள்" என்று நேரடியாகக் கூற முடியாத நெருக்கடியும் உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (Bruhat Bengaluru Hotel Owners Association) ஒரு புதிய திட்டத்தை ஆலோசித்து வருகிறது. 

இதையும் படிங்க: பெங்களூருவை திக்குமுக்காட வைக்கும் டிராஃபிக்..!! ஐடி ஊழியர்களுக்கு வருகிறது WFH..!!

அதன்படி, டீ, காபி அல்லது சிற்றுண்டி போன்ற குறைந்த ஆர்டர்களை மட்டும் செய்து, நியாயமான நேரத்துக்கு மேல் அமர்ந்திருப்பவர்களிடம் 'டேபிள் கட்டணம்' அல்லது 'அபராதக் கட்டணம்' வசூலிக்கப்பட உள்ளது. சங்கத்தின் தலைவர் பி.சி. ராவ் இது குறித்து கூறுகையில், "பலர் ஒரு டீ அல்லது காபி ஆர்டர் செய்துவிட்டு மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகின்றனர். இது மற்ற வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, எங்களுக்கு வணிக ரீதியான இழப்பையும் ஏற்படுத்துகிறது.

எனவே, நீண்ட நேரம் இருப்பவர்களிடம் மேஜை கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளோம். ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் நிர்ணயிக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கான இறுதி முடிவுக்கு பிறகு, கர்நாடக அரசுக்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதி, இந்த நடைமுறையை சட்டப்பூர்வமாக அமல்படுத்துவதற்கான அனுமதி பெற திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

முதற்கட்டமாக, ஒரு குறிப்பிட்ட நேரம் (எ.கா., 30-45 நிமிடங்கள்) வரை இலவசமாக அமர அனுமதிக்கப்பட்டு, அதற்கு மேல் கூடுதல் நேரத்துக்கு தனி கட்டணம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இது போன்ற கட்டணம், பார்க்கிங் கட்டணம் போலவே செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, பெங்களூருவின் கேஃபே கலாசாரத்தை எப்படி பாதிக்கும் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 

சிலர் இதை வரவேற்கின்றனர்; ஏனெனில் இது கடை உரிமையாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும். மற்றவர்கள், இது சமூக உறவுகளையும், சுதந்திரமான அரட்டையையும் தடை செய்யும் என்று கருதுகின்றனர். எனினும், சங்கம் இதை சீரான முறையில் அமல்படுத்த, அரசு ஒப்புதல் பெறுவதாகக் கூறியுள்ளது. விரைவில் இந்தப் புதிய விதி பெங்களூரு ஹோட்டல்களில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உலகின் நெரிசல் மிகுந்த நகரங்கள்: லிஸ்டில் பெங்களூரு.. எத்தனையாவது இடம் தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share