அதிமுக கவுன்சிலருக்கு திமுக பெண் கவுன்சிலர் ‘பளார்’ விட்ட சம்பவம்.. 13 பேர் மீது வழக்குப்பதிவு..!
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட விவகாரத்தில் 13 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் கடந்த 29ம் தேதி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோட்டத்தின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அப்போது மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி எழுந்து, கட்டிட அனுமதி முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அவர் மீது பேப்பர் ஒன்றை தூக்கி எறிந்தனர். மேலும் திமுக கவுன்சிலர் சுகாசினி எழுந்து அவரிடம் வாக்குவாதம் செய்ய சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!
இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் திடீரென மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் போலீசாரின் பேச்சு வார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் 8 கவுன்சிலர்கள் மீதும், திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் 5 கவுன்சிலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தாக்குதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், பெண்களிடம் இழிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. அடர்ந்த காட்டில் இளைய மகள்.. வயநாட்டில் நடந்தது என்ன..?