டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! ஜிம் வாசலில் பயிற்சியாளர் சுட்டுக்கொலை! ஒரே மாதத்தில் 3-வது கொலை!
சுமார் 12 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குப் பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
புதுடெல்லி: தெற்கு டெல்லியின் அயா நகர் பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றின் வெளியே திங்கள்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் டெல்லியில் உடற்பயிற்சி கூடங்களுக்கு வெளியே இதுபோன்று 3 துப்பாக்கிச்சூடு கொலைகள் நடந்துள்ளதால், இந்த சம்பவங்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் தெரிவித்த முதற்கட்ட தகவலின்படி, அயா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நபர் திங்கள்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் ஜிம் வாசல் பகுதியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 12 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குப் பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம், முன்விரோதம் அல்லது குற்றக் கும்பல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் ஜிம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ள மூன்றாவது துப்பாக்கிச்சூடு கொலை இது என்பது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் ஜிம் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் கோகி கும்பலின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 31-ம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், செப்டம்பர் 3-ம் தேதி நரேலா பகுதியில் உள்ள ஜிம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பிரமோத் தாஹியா சுட்டுக்கொல்லப்பட்டார்.
தற்போதைய சம்பவத்தையும் சேர்த்து, இந்த மூன்று கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!