பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி போலி சாமியார் கைவரிசை!! உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!
நீ பணம் கொடுக்காவிட்டால் உனக்கும். உன் தாய்க்கும் விபரீதம் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ரேணுகா, மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்ட போலி சாமியாரின் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான 25 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புனேயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே (25) புல்லாங்குழல் கலைஞராவார். இசையில் ஆர்வம் கொண்ட அவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஒரு ஆன்மிக இசைப் பள்ளியில் முதுகலை இசைப் படிப்பை மேற்கொண்டு வந்தார். அங்கு விடுதியில் தங்கியிருந்த ரேணுகா, சில தனிப்பட்ட பிரச்சினைகளால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் சமூக வலைதளம் வாயிலாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சாமியாரைத் தொடர்பு கொண்டார். அந்த நபர் தன்னை ஆன்மிகவாதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, "உன் பிரச்சினைகள் முழுமையாக தீர வேண்டுமானால் சுடுகாட்டில் வைத்து மாந்திரீக பூஜை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இதை நம்பிய ரேணுகா, கடந்த 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அந்த சாமியாரின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் சுமார் 74 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
இருப்பினும், ரேணுகா தன்னிடமிருந்த மொத்த பணத்தையும் கொடுத்த பின்னரும் அந்த போலி சாமியார் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், "பணம் கொடுக்காவிட்டால் உனக்கும் உன் தாய்க்கும் பெரும் விபரீதம் ஏற்படும்" என்று மிரட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த மிரட்டல்களால் பயந்து போன ரேணுகா, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பவுட் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. போலீசார் அந்த அடையாளம் தெரியாத போலி சாமியார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க ராஜஸ்தான் நோக்கி போலீசார் விரைந்துள்ளனர்.
இசைக்கலைஞராக எதிர்காலத்தில் பெரும் உயரங்களைத் தொட நினைத்த ரேணுகாவின் இந்த மரணம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. போலி சாமியார்களின் ஏமாற்று வலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது கவலையளிக்கிறது. மக்கள் இத்தகைய போலி ஆன்மிகவாதிகளிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தச் சம்பவம் புனே முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது! மோடி சபதம்!