போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!
மதுரையில் 'பார்க்கிங்' பிரச்னை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை 55, போலீஸ் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் பார்க்கிங் பிரச்னை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த 55 வயது சிவனடியார் பரமசிவம், போலீஸ் விசாரணையின்போது தாக்கப்பட்டதாகவும், அதன்பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். கடந்த ஜூலை 17-ம் தேதி, வீட்டின் அருகே வாகனம் நிறுத்துவது தொடர்பாக அங்கு வசிக்கும் தம்பதியுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பரமசிவத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து சிந்தாமணி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார்.
ஜூலை 19-ம் தேதி போலீசார் பரமசிவத்தையும் அவரது மனைவி அய்யம்மாளையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் பரமசிவத்துக்கு தலையில் உள்காயம் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... வரிசையாக சிக்கும் முக்கிய புள்ளிகள்...!
குறிப்பாக, ஷூ காலால் தலையில் தாக்கியதாக மனைவி புகார் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ் தரப்பில் முழுமையான விளக்கம் வெளியாகவில்லை.
விசாரணைக்குப் பிறகு பரமசிவத்துக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆகஸ்ட் 8-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தலையில் ரத்தக்கசிவு இருப்பதாகவும், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமசிவம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, போலீஸ் தாக்குதலே தனது கணவரின் உடல்நலக்குறைவுக்கும் மரணத்துக்கும் காரணம் என அய்யம்மாள் முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். விசாரணையின்போது தன்னை தாக்கிய போலீசார் மற்றும் பின்னர் மருத்துவமனையில் மிரட்டியதாக கூறப்படும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், சிகிச்சையில் இருந்தபோது பரமசிவம் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில், போலீசார் தன்னை தாக்கியதாகவும், தனது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் குறிப்பிட்ட 5 போலீஸார்தான் காரணம் என்றும் அவர் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார். விசாரணை முடிவில் உண்மையான காரணம் மற்றும் பொறுப்புக்குரியவர்கள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "மதுரை பயலுகடா... கொடூரமா"..! LED பலகையுடன் ஓடிய அரசு பேருந்து..!! சர்ச்சை..!