முடிந்ததை செய்யட்டும்!! பார்த்துக் கொள்ளலாம்! இலாகாவை மாற்ற அழுத்தமா? அமைச்சர் விக்னேஷ் அதிரடி!
நல்லது செய்தால் சும்மா இருப்போர் அழுத்தம் தான் தருவர். அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
கோவை: மதுக்கடைகளில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு உறுதி செய்யப்பட்டால் சமரசத்துக்கு இடமின்றி நடவடிக்கை பாயும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், தனது நடவடிக்கைகளால் சிலர் பாதிக்கப்பட்டு, தமது துறையை மாற்ற அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, “அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம்” என அவர் பதிலளித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்முனைவோருடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜ் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது பேசிய அமைச்சர் விக்னேஷ், மதுக்கடைகளில் ஊழியர்கள் தவறு செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும், தவறுகளை அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்க திமுக மாதிரி கிடையாது! தப்பு பண்ணினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்! அமைச்சர் விக்னேஷ் அதிரடி!
சில இடங்களில் ஊழியர்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் ஊழியர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இதுபோன்ற புகார்கள் உண்மையாக இருப்பது விசாரணையில் தெரியவந்தால், 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, சில மதுபானத் தொழிற்சாலை உரிமையாளர்கள் அமைச்சரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, அவரது இலாகாவை மாற்றுவதற்காக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “அது உண்மையா என தெரியவில்லை. நல்லது செய்தால் சும்மா இருப்போர் அழுத்தம் தான் தருவர். அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம்” என்றார். இந்த பதில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, புகார் உண்மை என தெரியவந்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை என்ற அவரது கருத்து, துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், தனது துறையை மாற்றுவதற்கான அழுத்தம் இருப்பதாக கூறப்படும் தகவலை அமைச்சர் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!