பாப்பிரெட்டிப்பட்டியில் பயங்கரம்! மதுபோதையில் மகளையும் தாயையும் வெட்டிக் கொன்ற சமையல் மாஸ்டர்!
ஆத்திரமடைந்த சுரேஷ், மதுபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகளையும், அவரை காப்பாற்ற வந்த பாட்டியையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் படுகாயமடைந்த பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதிகாரப்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 45. ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஷாலினி சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தம்பதியின் மகள் சின்மயி, 19, தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் பாட்டி உமாராணி, 60, உடன் வசித்து வந்தார். சுரேஷ் தனியாக மற்றொரு வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளம்! 8,000-ல் இருந்து 12,500 கனஅடியாக எகிறிய நீர்வரத்து! பரிசல் தடை நீட்டிப்பு!
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சின்மயி தனது தந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது சின்மயி யாருடன் செல்போனில் பேசுகிறார் என்று சுரேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், குடும்ப பிரச்சினை குறித்து சின்மயி தனது தந்தையை கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், மதுபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
மகள் தாக்கப்படுவதை பார்த்த உமாராணி அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் சுரேஷ் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே படுகாயமடைந்த சின்மயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சின்மயி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவம் இரட்டை கொலையாக மாறியது.
சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், ஏ.பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறு எந்த அளவுக்கு விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்! பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!