DPI வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்..! குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..!
சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது போராட்டத்தின் மையக் கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகும்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி. இதை நிறைவேற்ற வில்லை எனக் கூறி ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தங்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை பணி நிரந்தரம் தான் தேவை என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இன்று சட்டப்பேரவையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் பணி நேர அடிப்படையில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: போராட்டத்தில் குதித்த பகுதிநேர ஆசிரியர்கள்... DPI வளாகத்தில் பரபரப்பு..!
முதல்வர் அறிவிப்பால் ஆசிரியர்கள் சமாதானம் ஆகி போராட்டங்களை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம் கோரி கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராடிய ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஓய மாட்டோம்... 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... DPI அலுவலகம் முற்றுகை...!