2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!
புதுச்சேரியில் 2வது நாளாக இன்றும் யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. கேரளாவிலும் அசாமிலும் முதல் நாளிலேயே சில வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த நிலையில், புதுச்சேரியில் முதல் இரண்டு நாட்களும் முற்றிலும் வெறிச்சோடிய நிலை நீடித்து வருகிறது.
நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியபோது ஒருவர் கூட வரவில்லை. இன்று இரண்டாவது நாளாகவும் அதே நிலை தொடர்கிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒருசிலர் மட்டும் நேரில் வந்து வேட்புமனு படிவங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் எந்த அரசியல் கட்சி வேட்பாளரும் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடைசி தேதி வரை இன்னும் சில நாட்கள் இருந்தாலும், இரண்டு நாட்களில் எந்த அசைவும் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
இதற்கு முக்கிய காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் நீடிக்கும் இழுபறி கருதப்படுகிறது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. குறிப்பாக காங்கிரஸ் – திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை குறித்து பேச்சு நீண்டு வருகிறது. பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியிலும் இதே நிலைதான். இதனால் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய தயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி அரசியலில் கட்சிகள் பெரும்பாலும் கூட்டணி அடிப்படையிலேயே போட்டியிடுவது வழக்கம். தனித்து நின்று போட்டியிடும் கட்சிகள் குறைவு. எனவே கூட்டணி உறுதியாகும் வரை வேட்புமனு தாக்கல் தாமதமாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் கூட்டணி இறுதியானால், வேட்புமனு தாக்கல் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய வெறிச்சோடிய அலுவலக காட்சி, புதுச்சேரி அரசியலின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேமுதிகவுக்கு எத்தன சீட்டுனு முதல்ல சொல்லுங்க!! திமுகவில் போர்க்கொடி தூக்கும் விசிக! கம்யூ., கட்சிகள்!