×
 

சேலத்தில் அதிர்ச்சி! துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட பெண்! விசாரணையில் பகீர்!

கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

சேலம் மாநகரில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் யார், இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அரிசிபாளையம் மெயின் ரோடு பகுதியில் பூசாரி ஒருவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர்.

அப்போது தொட்டிக்குள் ஒரு மூட்டை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய பயங்கரம்... தொழிலாளியை கூலிப்படையுடன் சேர்ந்து கொன்ற முதலாளி... காட்டிக்கொடுத்த ‘பச்சை’....!

தண்ணீர் தொட்டிக்குள் இருந்த மூட்டை வெளியே எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதனை பிரித்து பார்த்தபோது, அதற்குள் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது. உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்ததுடன், பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதால் அழுகிய நிலையிலும் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் உடல் பாகங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

மேலும், சம்பவம் நடந்த வீட்டின் மொட்டை மாடிக்கு கடந்த சில நாட்களில் வந்து சென்றவர்கள் யார், அங்கு யாராவது தங்கியிருந்தார்களா, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பதிவுகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்து போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share