‛எந்த ஊரு நாய்டா நீ’ வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்! கடையை அடித்து நொறுக்கிய போலீஸ்!
‛எனக்கு எந்த ஊரு தெரியுமா... இந்த ஊரு தான்... பஞ்சம் பிழைக்க வந்த நாய்’ என்று தொடர்ந்து கான்ஸ்டபிள் இழிவாக பேசினார்.
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய மோகன் குமார், நேற்றிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாஸ்ட்ஃபுட் கடை தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளூர் நபருக்கு சொந்தமான இந்தக் கடையை வடமாநில இளைஞர்கள் நிர்வகித்து வந்தனர்.
கடைக்கு சென்ற கான்ஸ்டபிள் மோகன் குமார், “10 மணிக்கு மேல் எப்படி கடை வைக்கலாம்? மூடுடா” என்று வடமாநில இளைஞர்களைப் பார்த்து கோபமாகக் கூறினார். கடையில் இருந்த பொருட்களை லத்தியால் அடித்துத் தள்ளினார். மேலும் அவர்களை தரக்குறைவாகப் பேசினார்.
இதனால் கடையில் இருந்த வடமாநில இளைஞர்களில் ஒருவர் தைரியமாக எதிர்க்கொண்டார். “எப்படி சார் மேல கை வைக்கலாம்?” என்று கேட்டார். இது கான்ஸ்டபிளுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “எந்த ஊரு நாய் டா நீ?” என்று இழிவாகப் பேசினார்.
இதையும் படிங்க: வாய மூடுங்க!! ஏன் வரல!! அமைச்சர் காந்தியை கண்டித்த முதல்வர்!! சமாதானப்படுத்திய நேரு!
தொடர்ந்து “எனக்கு எந்த ஊரு தெரியுமா... இந்த ஊருதான்... பஞ்சம் பிழைக்க வந்த நாய்” என்று கொடூரமாக வசைபாடினார். ஆனால் அந்த இளைஞர் அசராமல், “நாங்கள் இங்கு வேலைதான் பார்க்கிறோம். ஓனரிடம் பேசுங்கள்” என்று தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள், இளைஞரின் சட்டை காலரைப் பிடித்து இழுத்து, லத்தியால் வாயில் குத்தினார். தொடர்ந்து கெட்ட வார்த்தைகளால் வசைபாடினார். “இனிமேல் நீங்க இங்க கடை போட முடியாதுடா... நாளைக்கு கடை இருந்துச்சுனா நான் மீசையை எடுத்துக்கிறேன்” என்று வீராப்புடன் மிரட்டினார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாகப் பதிவாகியது. வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடமாநில தொழிலாளர்களை இழிவாக நடத்தியது, போலீஸ் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது என கடும் விமர்சனங்கள் எழுந்தன.
திமுக ஆட்சியில் வடமாநில மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் அதை மேலும் வலுப்படுத்தியுள்ளது. போலீஸாரே வடமாநில மக்களை இழிவாக நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, காஞ்சிக்கோயில் எஸ்பி சுஜாதா உடனடியாக நடவடிக்கை எடுத்தார். கான்ஸ்டபிள் மோகன் குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தில் போலீஸ் - வடமாநில தொழிலாளர்கள் உறவு, அதிகார துஷ்பிரயோகம் குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. மக்கள் பாதுகாப்பு மற்றும் நீதியை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்! நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்!