சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் மட்டும் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 31ம் தேதி வரை 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை சைபர் மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், சைபர் மோசடிகளால் அதிகளவில் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4வது இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இணையவழி மோசடிகள், போலி முதலீட்டு திட்டங்கள், வங்கி கணக்கு மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் ‘பிரகதி’ கூட்டத்திலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக சமீபத்திய கூட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 52வது பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சைபர் குற்றங்களை தடுப்பதுடன், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: ஒரு நபருக்கு 9 சிம் கார்டு மட்டுமே அனுமதி! மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு! அமலாகும் புதிய விதி!
இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வரும் பிரகதி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3வது இடத்திலும் உள்ளன. தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.
சைபர் குற்றங்களால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 2வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3வது இடத்திலும் உள்ள நிலையில், தமிழகம் 4வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 31ம் தேதி வரை 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை சைபர் மோசடியின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தமிழக சைபர் கிரைம் மாநில ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தேசிய அளவில் சைபர் குற்றங்களால் அதிக பணத்தை இழக்கும் மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் இருப்பதாகவும், தமிழகத்துக்குள் கோவை முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் 53வது பிரகதி கூட்டத்திலும் சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் மோசடி அழைப்புகள், சந்தேகமான இணைப்புகள் மற்றும் முதலீட்டு ஆசை காட்டும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தே வேலை! தினமும் வருமானம்! தொடரும் ஆன்லைன் மோசடி! சைபர் குற்றவாளிகளின் புதிய டெக்னிக்!