×
 

ஸ்மார்ட் சிட்டி நிதியில் விதிமீறல்?! மக்கள் பணத்தில் கார், டிவி வாங்கி குவிப்பு?! CAG அறிக்கையில் பகீர் தகவல்கள்!

2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 7 நகரங்களில் ரூ.1,602.2 கோடி மதிப்பில் ஒப்புதல் பெற்ற 52 திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் விடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நிதி பயன்படுத்திய விதம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைக் குழு எனப்படும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் திட்ட நிதி அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்கு மாறாக பயன்படுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில் பல்வேறு குறைபாடுகள் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத பணிகளுக்கும் திட்ட நிதி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மாநகராட்சி மின்சாரக் கட்டணம், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கார்கள், கணினிகள், அலுவலகப் பொருட்கள் மற்றும் 110 இன்ச் எல்இடி தொலைக்காட்சி போன்றவற்றை வாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சிதாங்க பெஸ்ட்! தூய்மையான காற்று நகரங்கள் ரேங்கிங்! சென்னையை பின்னுக்கு தள்ளி அசத்தல்! தமிழகத்துக்கு பெருமை!

2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 7 நகரங்களில் ரூ.1,602.2 கோடி மதிப்பில் ஒப்புதல் பெற்ற 52 திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் விடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், ரூ.623.86 கோடி மதிப்பில் 44 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் அதிகபட்சமாக ரூ.314.62 கோடி மதிப்பிலான 15 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி வளாகத்தில் பசுமைக் கட்டடம், கோவை நேரு விளையாட்டு அரங்கில் விளக்குகள், திருநெல்வேலியில் விருந்தினர் மாளிகை, மதுரையில் கருத்தரங்கு மையம் உள்ளிட்ட பணிகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், 6 நகரங்களில் கார்கள், கணினிகள், சட்டக் கட்டணங்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத செலவுகளுக்காக ரூ.23.83 கோடி பயன்படுத்தப்பட்டதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது.

சென்னையில் அரசு விளம்பரங்களுக்கு ரூ.66.58 லட்சமும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் தொடர்பில்லாத பணிகளுக்கு ரூ.18.44 லட்சமும் செலவிடப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூரில் கருத்தரங்கு அறை புதுப்பிப்பு மற்றும் 110 இன்ச் டிவி உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், ஈரோட்டில் கழிவுநீர் பணியாளர்களின் ஊதியத்துக்கு ரூ.2.59 கோடி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பிற குடிமைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.48.36 லட்சம் வழங்கப்பட்டதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் டெண்டர் நடைமுறைகளிலும் விதிமீறல்கள் இருந்ததாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசின் 100 நாள் கணக்கு! தவெக அமைச்சர்களுக்கு ஷாக்! 3 பேர் நீக்கம், ஒருவருக்கு இலாகா மாற்றம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share