முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!
பணியிடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில அதிகாரிகள் இன்னும் புதிய பணிகளில் சேரவில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட சில அரசு அதிகாரிகள் மீண்டும் தங்களது பழைய பணியிடத்தையே பெற முயற்சிப்பதாக தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் புகார் எழுந்துள்ளது. புதிய பணியிடங்களில் பொறுப்பேற்காமல் நீண்ட விடுப்பில் செல்வது, மேல்மட்டத்தில் பரிந்துரைகளை பெற முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 41 அரசு துறைகள் உள்ளன. ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நிர்வாக காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. கடந்த காலங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளிலும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சிலர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பரிந்துரைகளை பெற்று மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பியதாக கூறப்படுகிறது.
த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியாற்றியவர்களை பல்வேறு துறைகளில் பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஊரக வளர்ச்சி, நீர்வளம், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், வருவாய், வேளாண்மை மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?
ஆனால், பணியிடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில அதிகாரிகள் இன்னும் புதிய பணிகளில் சேரவில்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது. சிலர் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்து, தங்களது பழைய பணியிடத்தை மீண்டும் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக பொதுப்பணித்துறையில் கடந்த மாதம் 16ஆம் தேதி 23 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும், புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை செயலர் உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சில அதிகாரிகள் இன்னும் பணியில் சேரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் நீர்வளத்துறையிலும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சில பொறியாளர்கள் புதிய இடங்களில் பொறுப்பேற்காமல் விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேல்மட்டத்தில் பேசி பழைய பணியிடத்துக்கே திரும்புவதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற செயல்களுக்கு எதிராக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பணியிடமாற்ற உத்தரவை அமல்படுத்தாமல் நீண்ட காலம் பணியில் சேராமல் இருப்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சில அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சமரச முயற்சிகள் நடப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், ஒரு பணியிடம் நீண்ட காலம் காலியாக இருந்தால், அந்த பணியிடத்தை நிதித்துறை திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறைகளில் நிரந்தர பணியிடங்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்பதால், பணியிடமாற்ற உத்தரவுகளை அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!