ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!
மாணவர்களில் ஒருவர் முன்பு பள்ளி விடுதியில் தங்கி படித்துள்ளார். அவரது பையில் இருந்த பணம் மற்றும் செல்போனை ரூபா ரெட்டி கைப்பற்றி கண்டித்ததுடன், அவரை விடுதியில் இருந்து வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
தெலங்கானா: பணத்துக்காக பள்ளி தலைமை ஆசிரியையை 10-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த இந்த கொலை வழக்கில், சிறுவர்களிடம் இருந்து ரத்தக்கறை படிந்த ரூ.1.54 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரூபா ரெட்டி. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், பின்னர் வீட்டுக்குள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் முக்கிய திருப்பமாக, கொலைக்கு முன்பு ரூபா ரெட்டி தனது அத்தையுடன் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. அப்போது அவர் ஒருவரை பார்த்து ‘பாபு’ என்று அழைத்ததாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களை அவர் வழக்கமாக இவ்வாறு அழைப்பதை அறிந்த போலீசார், கொலை நடந்த காலகட்டத்தில் பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது கவனம் செலுத்தினர்.
இதையும் படிங்க: தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?
சம்பவத்துக்கு சில நாட்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்டபோது, தொடர்ந்து பள்ளிக்கு வராத 13 மாணவர்களை போலீசார் அடையாளம் கண்டு விசாரித்தனர். அவர்களில் 10-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் திடீரென அதிக பணத்தை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ஒரு மாணவரிடம் இருந்து ரூ.1.54 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளில் இருந்த ரத்தக்கறை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையில் அது ரூபா ரெட்டியின் ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரு மாணவர்களுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பின்னணியும் தெரியவந்துள்ளது. மாணவர்களில் ஒருவர் முன்பு பள்ளி விடுதியில் தங்கி படித்துள்ளார். அவரது பையில் இருந்த பணம் மற்றும் செல்போனை ரூபா ரெட்டி கைப்பற்றி கண்டித்ததுடன், அவரை விடுதியில் இருந்து வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது மாணவருக்கு ஆத்திரம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பணம் சம்பாதிக்க குறுக்கு வழியைத் தேடிய மாணவன், பள்ளிக் கட்டண பணம் ரூபா ரெட்டியின் வீட்டில் இருப்பதை அறிந்து, சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. தனது நண்பனையும் சேர்த்துக்கொண்டு, ஆகஸ்ட் 11-ம் தேதி இருவரும் முகமூடி அணிந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
தாக்குதலின்போது முகமூடி விலகியதால், ரூபா ரெட்டி மாணவர்களில் ஒருவரை அடையாளம் கண்டதாகவும், இதனால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் அவரை பலமுறை கத்தியால் தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் வீட்டில் இருந்த ரூ.1.54 லட்சம், ஐபோன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு இருவரும் தப்பியதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் கள்ளச்சாராய சோகம்: பலி 7 ஆக உயர்வு; 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!