டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!
திருப்பூரில் டேங்கர் லாரி - கார் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கோர சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசல் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார் முற்றிலும் நொறுங்கியதுடன், அதில் பயணித்த பெரும்பாலானோர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில் காக்காப்பள்ளம் அருகே இந்த விபத்து நடைபெற்றது. அப்போது விஜயமங்கலம் நோக்கி சென்ற டீசல் டேங்கர் லாரியும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் கார் பலத்த சேதமடைந்து முற்றிலும் நொறுங்கியது. காரில் பயணம் செய்திருந்த 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருப்பூர் அரசுப் பள்ளியில் 'One day HM'..!! மாணவர்களுக்காக சூப்பர் திட்டம்..!!
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விஜயமங்கலம் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு, உயிரிழந்த 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து விஜயமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேருக்கு நேர் மோதலால் நிகழ்ந்த இந்த கோர விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!