பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்! ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!
ஜூன் 17, ஜி7 உச்சி மாநாட்டில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பிரான்ஸில் நடைபெறும் 52வது ஜி7 உச்சி மாநாட்டில் ஜூன் 17 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்க உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி தற்போது ஒரு வார ஐரோப்பிய பயணத்தில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸில் தொடங்கிய இந்த பயணத்தில் நைஸ் நகரில் அதிபர் மேக்ரானுடன் சந்தித்த பிறகு, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க எவியன் நகருக்கு சென்றுள்ளார். ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்திய மாலுமிகள் மீது ஓமன் கடலில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் கடும் கோபம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள உயர் சுங்க வரிகள் மற்றும் ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது போன்ற விவகாரங்களும் இரு நாட்டு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: ஓமன் கடற்கரையில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்! அமெரிக்க தூதருக்கு பறந்தது சம்மன்!
இருப்பினும், ஜூன் 17 அன்று நடைபெறும் இருதரப்பு சந்திப்பில் வர்த்தக ஒத்துழைப்பு, எரிசக்தி துறை ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேச உள்ளனர். அமெரிக்க உயர் அதிகாரிகள், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தகப் பூசல்களை தீர்க்க இந்த சந்திப்பு முக்கிய அடித்தளமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் விரைவில் இந்தியா வருகை தர உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மீண்டும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணம் இந்தியாவின் உலகளாவிய இராஜதந்திரத்துக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜி7 மாநாட்டில் பல்வேறு தலைவர்களுடன் அவர் நடத்தும் பேச்சுவார்த்தைகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலன்களை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!