×
 

ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போர் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை தொடங்கியுள்ளன. இது ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு பெரும் ஊதியாக அமைந்துள்ளதுடன், வளைகுடா பகுதி முழுவதும் போர் பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் ஈரானும் அணு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிய நிலையில், அமெரிக்க ராணுவம் ஈரான் கடல் பகுதிகளில் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட பெரும் படைப்பிரிவுகளை குவித்திருந்தது. இந்தப் பின்னணியில் இஸ்ரேல் தலைமையிலான கூட்டணி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 

இதையும் படிங்க: முற்றும் மோதல்: இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. பற்றி எரியும் ஈரான்..!! நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்..!!

இஸ்ரேலின் முதல் தாக்குதல் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மையப் பகுதியில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஈரானின் உச்சத் தலைவர் அயதொல்லா அலி கமேனியின் அலுவலகங்கள் அருகே பெரும் வெடிப்புகள் நிகழ்ந்து, அங்கு கனமான புகை மூட்டம் எழுந்துள்ளது. தெஹ்ரானில் உள்ள பல பகுதிகளில் வெடிப்பொலிகள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டு இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். "சற்று நேரத்துக்கு முன்பு அமெரிக்க ராணுவம் ஈரானில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. எங்கள் நோக்கம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்காக ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை அழிப்பதாகும்" என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கப் படைகள் வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், இது பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இதை 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்று பெயரிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னணியாக, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணை உற்பத்தியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் பல மாதங்களாக திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாமல் போனதாக இரு நாடுகளும் வாதிடுகின்றன. ஈரான் இதற்கு கடுமையான பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈரான் இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

உடனடி விளைவுகளாக, ஈரானும் இஸ்ரேலும் தங்கள் வான்வெளியை முழுமையாக மூடியுள்ளன. ஈரானில் நாடு முழுவதும் தாக்குதல்கள் நடப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரான் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் சேவைகள் பெரும்பாலான இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் விமான நிலையங்கள் மூடப்பட்டு, பொதுமக்கள் விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போர் முன்னேற்றம் சர்வதேச பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் விலை உயரும் அச்சம் நிலவுவதால், தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பு சொத்துகளின் விலை உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது. முதலீட்டுச் சந்தைகள் அடுத்த சில நாட்களில் கடுமையான ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். இரு தரப்பும் மேலும் தீவிரமடையும் பட்சத்தில், வளைகுடா பகுதி முழுவதும் பெரும் போராக மாறும் அபாயம் உள்ளது. சர்வதேச சமூகம் இப்போதே தலையிட்டு அமைதி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரான்: மார்க்கெட்டில் விழுந்து சுக்குநூறான ராணுவ ஹெலிகாப்டர்..!! 4 பேர் பரிதாப பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share