முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி! மத்திய பிரதேசத்தில் 6 புகார்கள்! போலீஸ் விசாரணை தீவிரம்!
இந்த விவகாரம் தொடர்பாக இந்தூர் போலீசில் ஆறு புகார்கள் பதிவாகியிருப்பதை குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா உறுதி செய்துள்ளார்
இந்தூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பெயரை பயன்படுத்தி, அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறி ஆன்லைன் மூலம் பணமோசடி செய்ததாக மத்திய பிரதேசத்தில் பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இந்தூர் போலீசில் கடந்த மாதம் ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வரும்தாக கூறப்படும் மோசடி கும்பல், விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளையின் நிர்வாகிகள் என பொதுமக்களை ஆன்லைன் வழியாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் நிதி தேவைப்படுபவர்களை குறிவைத்து இந்த மோசடி நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், தகுதியானவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்றும், சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு குறைந்த சிரமத்தில் கடன் பெற்றுத் தரப்படும் என்றும் அந்த நபர்கள் ஆசை வார்த்தைகளை கூறியதாக புகார்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!
இதனை நம்பி தொடர்பு கொள்ளும் நபர்களிடம், விண்ணப்பப் பதிவு கட்டணம், ஆவண சரிபார்ப்பு கட்டணம், கடன் செயலாக்க கட்டணம் என வெவ்வேறு காரணங்களை கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வகையில் ஒருவரிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை பணம் பெறப்பட்டதாக போலீசில் அளிக்கப்பட்ட புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பணம் செலுத்திய பிறகு, உறுதியளித்தபடி நிதியுதவியோ அல்லது கடனோ வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதன்பிறகு தொடர்பு கொண்டபோதும் உரிய பதில் கிடைக்காமல், மோசடி கும்பல் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தூர் போலீசில் ஆறு புகார்கள் பதிவாகியிருப்பதை குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபலங்களின் பெயர், அறக்கட்டளை அல்லது சமூக நலத்திட்டங்களின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் கேட்கும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் செலுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்ப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!