ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கும் ரஷ்யா.. மரண பயத்தில் உக்ரைன்.. 14 பேர் பரிதாப பலி..!
உக்ரைன் மீது ரஷ்யா இன்று அதிகாலை நடத்திய டிரோன் தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போர் இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஏனென்றால், இரு நாடுகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருவதோடு, மறுபுறம் தாக்குதலையும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் கடந்த 1ம் தேதி நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது. இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் கணித்துள்ளனர்.
தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாதம் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும்! ஓசாமா பின்லேடன் நியாபகம் இருக்கா? ஜெய்சங்கர் வார்னிங்
கடந்த வாரம் கூட, உக்ரைனின் நகரங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒன்றரை மாத குழந்தை உட்பட 23 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தனியார் வீடுகள் சேதமடைந்தன. தாக்குதலில் ரஷ்யாவின் 48 டிரோன்கள், இரண்டு ஏவுகணைகள் மற்றும் 4 வான்வழி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், ஏற்கனவே போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கார்கிவ் நகரை மேலும் நிலைகுலைய வைத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது. டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 44 படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து சேதமாகின.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி உலகெங்கும் எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகள், பிராந்திய பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளன. சர்வதேச சமூகம் இந்த தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: அடங்கமறுக்கும் ரஷ்யா.. உக்ரைன் மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்.. 2 பேர் பலி..!