ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! இங்கிலாந்தில் இளம் மேயர்! இந்திய வம்சாவளி இளைஞர் படைத்த சாதனை!
இங்கிலாந்தின் எல்ஸ்லேரி மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக துஷார் குமார் என்ற 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லண்டன்: இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகரங்களின் மேயராக 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் துஷார் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் மிக இளம் வயது மேயர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற துஷார் குமாரின் தாயார் பர்வீன் ராணியும் இதே நகரத்தின் துணை மேயராக பணியாற்றியவர். தாயின் அரசியல் ஈடுபாட்டைப் பின்பற்றிய துஷார், 20 வயதில் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு எல்ஸ்ட்ரீ அண்ட் போர்ஹாம்வுட் டவுன் கவுன்சிலின் துணை மேயராகவும் பொறுப்பு வகித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட துஷார், இளம் வயதிலேயே உள்ளாட்சி அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். அவரது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் பணியில் உள்ள ஈடுபாடு ஆகியவை அவருக்கு இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளன.
இதையும் படிங்க: ADMK படுதோல்வி… EPS மீது CV சண்முகம் நேரடி குற்றச்சாட்டு.! வெடிக்கும் அதிமுக உள்கலகம்!
தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், துஷார் தனது உயர் படிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளைஞர் வெளிநாட்டில் இத்தகைய உயர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகம் உட்பட இந்தியாவில் பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
துஷார் குமார் தனது பதவியேற்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசுகையில், “எனது சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் உழைப்பேன்” என்று தெரிவித்தார். அவரது தாயார் பர்வீன் ராணியும் மகனின் சாதனையைப் பாராட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் அரசியல், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் சாதித்து வரும் நிலையில், துஷார் குமாரின் இந்தச் சாதனை இளம் தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!