×
 

கடலுக்கு அடியில் குகையில் நடந்த ஆய்வு!! இத்தாலி நீச்சல் வீரர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பலி!!

மாலத்தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் குகையை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இத்தாலி நாட்டு நீச்சல் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

மாலத்தீவு: மாலத்தீவில் கடலுக்கு அடியில் உள்ள குகைகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த 5 நீச்சல் வீரர்கள் உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு தலைநகர் மாலேயிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாவூ அட்டோல் பகுதியில் 50 முதல் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள குகைகளை ஆய்வு செய்ய இத்தாலிய நீச்சல் வீரர்கள் குழு ஒன்று சென்றிருந்தது. நீண்ட நேரம் கடலுக்குள் மூழ்கிய அவர்கள் மேற்பரப்புக்கு வராததால், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தீவிர மீட்புப் பணிக்குப் பிறகு அவர்கள் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

ரோமில் உள்ள இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த 5 பேரில் 4 பேர் ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சூழலியல் பேராசிரியர் மோனிகா மான்டெபால்கோ, அவரது மகள் மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர். 

இதையும் படிங்க: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ!! கொழுந்து விட்டெறிந்த ஜூவாலையால் அதிர்ச்சி! பயணிகள் திக்! திக்!

இதுவரை ஒரு சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சடலங்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன.

இந்த ஆய்வுப் பயணம் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள குகைகளின் சூழலியல் அமைப்பு, உயிரினங்கள் மற்றும் புவியியல் அம்சங்கள் குறித்து ஆராய்வதே இந்தப் பயணத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிகாரிகளும் இத்தாலி தூதரக அதிகாரிகளும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வானிலை மேம்பட்டவுடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆழ்கடல் ஆய்வு மற்றும் சாகச நீச்சல் பணிகளில் ஈடுபடும் வல்லுநர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இது சுட்டிக்காட்டியுள்ளது. இத்தாலி அரசும் மாலத்தீவு அரசும் இணைந்து விபத்துக்கான காரணங்களை விரைவில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளன.

இதையும் படிங்க: அதிமுக, அமமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?! சிபிஐ விசாரணை கோருவோம்! டிடிவி தினகரன் மிரட்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share