×
 

மனிதக் கட்டுப்பாட்டை மீறுகிறதா AI..?? Kill switch அவசியம் வேண்டும்..!! ஒரே போடு போட்ட டிரம்ப்..!!

செயற்கை நுண்ணறிவு வங்கித் துறை போன்ற துறைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றக்கூடும், ஆனால் அது குறிப்பிடத்தக்க அபாயங்களையும் கொண்டுள்ளது என்று டிரம்ப் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கூகுளின் ஜெமினி, ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக் மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் உள்ளிட்ட முன்னணி AI சாட்போட்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து தொழில்முறைப் பணிகள் வரை ஊடுருவியுள்ளன. வேலைத்தளங்களில் தரவு பகுப்பாய்வு, தனிப்பட்ட தேவைகளுக்கான உதவி என பல்வேறு துறைகளில் AI மயமாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த வளர்ச்சியுடன் சேர்ந்து, AI மனிதக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினால் என்ன ஆகும் என்ற அச்சம் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AI தொழில்நுட்பத்துக்கு கடுமையான அரசாங்கக் கண்காணிப்பு தேவை என்று வலியுறுத்தியுள்ளார். 

மேலும், எல்லை மீறும் சூழலில் அதை உடனடியாக செயலிழக்கச் செய்யும் ‘கில் சுவிட்ச்’ (Kill Switch) போன்ற பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார். ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க்கின் ‘மார்னிங்ஸ் வித் மரியா’ நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் டிரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெற்றிக்கரமாக முடிவுக்கு வந்தது ஆர்டெமிஸ் 2..!! அடுத்த திட்டம் செவ்வாய்..!! டிரம்ப் போட்ட அதிரடி பதிவு..!!

வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மையை AI பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆம், அது சாத்தியம். ஆனால் AI வங்கித் துறையை மிகவும் சிறந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றும் திறன் கொண்டது” என்றார். AI இரு முகம் கொண்டது என்று விவரித்த டிரம்ப், அதன் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாலும், மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தைச் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் AI கட்டுப்பாட்டை மீறினால் அதை உடனடியாக நிறுத்தும் வழிமுறை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இருப்பினும், கில் சுவிட்சை யார் செயல்படுத்துவது, எப்படி இயங்கும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. அரசாங்கம் AI வளர்ச்சியை கண்காணித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது முக்கிய வாதம். இந்தக் கருத்து சமீபத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனம் அறிவித்த கிளாட் மைதோஸ் (Claude Mythos) AI மாடலுடன் தொடர்புபடுத்தி விவாதிக்கப்படுகிறது.

இந்த மாடல் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், எந்த இணைய அமைப்பையும் ஊடுருவி பாதுகாப்பு ஓட்டைகளைக் கண்டறியும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சைபர் தாக்குதல்களுக்கு இது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதால், ஆந்த்ரோபிக் நிறுவனம் இதை பொதுமக்களுக்கு வெளியிட தயங்குகிறது. முதலில் சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவை) வழங்கி சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை AIயின் இரட்டைத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.டிரம்பின் இந்தப் பரிந்துரை உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. AIயின் வேகமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், அதன் அபாயங்களைத் தடுக்கும் பொறுப்பான அணுகுமுறை தேவை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 

சீனா உள்ளிட்ட நாடுகளுடன் AI போட்டியில் அமெரிக்கா முன்னிலையில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டாலும், பாதுகாப்பு முதன்மை என்று அவர் வலியுறுத்தினார். இறுதியில், AI தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தலாக மாறக்கூடாது. இதற்கு சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய கட்டுப்பாட்டு வழிமுறைகள் அவசியம்.
 

இதையும் படிங்க: US Freedom250: டெல்லியில் தொடங்கிய கொண்டாட்டம்..!! டிரம்ப் ஃபோட்டோவுடன் வலம் வரும் ஆட்டோக்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share