×
 

300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!

தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த, 'ஏர் இந்தியா' விமானம், நடுவானில் திடீரென, 300 அடி கீழே இறங்கி கட்டுப்பாட்டை இழந்து பறந்த சம்பவத்தில், முதன்மை பைலட் கஞ்சா போதையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் ஊர்ஜிதமாகி உள்ளது.

புதுடெல்லி: தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென சுமார் 300 அடி கீழே இறங்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், விமானத்தின் முதன்மை பைலர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விமானம் நிலைதடுமாறியதற்கு பைலரின் போதைப்பொருள் பயன்பாடுதான் காரணமா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.

கடந்த 4-ம் தேதி புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியாவின் ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. அதில் 137 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் இருந்தனர். நடுவானில் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக கீழ்நோக்கி இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.

விமான விபத்து விசாரணை அமைப்பு நடத்திய முதற்கட்ட ஆய்வில், சுழல் காற்றில் விமானம் சிக்கியதால் அதன் ஹைட்ராலிக் மற்றும் தானியங்கி பைலட் அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

இதற்கிடையே, விமானத்தை இயக்கிய முதன்மை பைலர் குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் நடுவானில் நிலைதடுமாறியபோது, அவர் காக்பிட்டில் சுருண்டு கிடந்ததாகவும், காலில் ஒரு காலணி கூட இல்லாமல், அரைகுறை ஆடைகளுடன் இருந்ததாகவும் சில பயணிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் பைலருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரால் தனியாக நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்ததாகவும், அதிகாரிகள் உதவியுடன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், புக்கெட்டில் விமானம் புறப்படுவதற்கு முன்பு சக ஊழியர்களுக்கு பைலர் மதுபான விருந்து அளித்ததாகவும், அப்போது அவர் கஞ்சா பயன்படுத்தியதாக விமானப் பணிப்பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, பயணிகள் பகுதிக்கு சென்ற பைலர், காயமடைந்த பயணிகளிடம் நலம் விசாரிப்பது போல நடந்து கொண்டதுடன், தன்னை செல்போனில் வீடியோ எடுக்கக்கூடாது என எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், பைலர் போதையில் இருந்ததால்தான் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததா, அல்லது தொழில்நுட்ப கோளாறே முதன்மை காரணமா? என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கான முழுமையான பதில் விசாரணை முடிவில்தான் தெரியவரும்.

இதையும் படிங்க: வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share