மகனைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்ற ஆந்திர பெண்! ஒரே விபத்தில் மாமியார், மருமகள் பலி!
உயிரிழந்த நேகாவுக்கு 10 வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் உள்ளனர். இதனால் இந்த விபத்து குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மகன் மற்றும் மருமகளை சந்திப்பதற்காக சென்ற ஆந்திராவைச் சேர்ந்த குடும்பத்திற்கு எதிர்பாராத சோகம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரின் தென்மேற்கு புறநகர் பகுதியில் நடந்த பயங்கர கார் விபத்தில், மாமியாரும் மருமகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜி.டி. பிரசாத். ஓய்வுபெற்ற கப்பல் தள ஊழியரான இவர், கிரிக்கெட் சங்கத்தில் முன்னாள் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தனது மனைவி ரமா தேவியுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். அங்கு வசித்து வரும் மகன் மற்றும் மருமகளை சந்திப்பதுடன், குடும்ப நிகழ்ச்சியிலும் பங்கேற்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மெல்போர்னின் தென்மேற்கு புறநகர் பகுதியில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. அப்போது ஜி.டி. பிரசாதின் மருமகள் நேகா பொம்மாலி, 33, காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு அருகில் மாமியார் ரமா தேவி, 67, அமர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!
விபத்து மிகவும் வேகமாக நடந்த நிலையில், காரில் இருந்த ரமா தேவி மற்றும் நேகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில், இவர்களது காருக்குப் பின்னால் மற்றொரு காரில் வந்த ஜி.டி. பிரசாத் விபத்தில் சிக்காமல் காயங்களின்றி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நேகாவுக்கு 10 வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் உள்ளனர். இதனால் இந்த விபத்து குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மெல்போர்னில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தினர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ரமா தேவி மற்றும் நேகா ஆகியோரின் உடல்களை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகனைப் பார்க்கவும், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்கவும் ஆஸ்திரேலியா சென்ற நிலையில், ஒரே கார் விபத்தில் மாமியாரும் மருமகளும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மலேரியா தடுப்பு மாத்திரை சாப்பிட்ட 71 பேர் பாதிப்பு… 7 வயது சிறுமி உயிரிழப்பு! ஆந்திராவில் அதிர்ச்சி