2026 ஏப்ரலில் எலெக்ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..
வங்கதேசத்தில் பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரலின் முதல் பாதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செயல்திட்டத்தை, தேர்தல் கமிஷன் வரும் மாதங்களில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையே பதற்றம் நிலவியது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிப் முனீர் தான் முக்கிய காரணம்.
இந்நிலையில் வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்ததற்கு ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் இடைக்கால அரசுக்கு முழு ஆதரவு வழங்கினார். இருப்பினும், பொதுத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: எலெக்ஷன் எப்போ? கழுத்தை நெறிக்கும் கேள்வி.. இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் வங்கதேசம்..
அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகியும், தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வராததை அடுத்து, வாக்கர் உஸ் ஜமான் வங்கதேசத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் தேர்தலை விரைந்து நடத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில் இந்தாண்டு டிசம்பர் துவங்கி, அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, முஹமது யூனுசின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் யூனுசின் இந்த முடிவுக்கு, ராணுவ தளபதி மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓர் அரசு கவிழ்ந்து மூன்று மாதத்துக்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என, அரசியல் சாசன விதி உள்ள நிலையில், மிகவும் தாமதமாக தேர்தலை நடத்துவதா என, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இடைக்கால அரசு பொறுப்பேற்கும் போது, இந்த ஆண்டு ஜனவரியில் பொது தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், அதை நடத்தாமல் யூனுஸ் காலம் தாழ்த்துவது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இடைக்கால அரசுக்கும், ராணுவத்துக்கும் தேர்தல் தொடர்பான விஷயத்தில் மோதல் எழுவதற்கு முக்கிய காரணமே தேர்தல் தொடர்பான சீர்திருத்தங்களே. தேர்தலுக்கு முன் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, இடைக்கால அரசு கூறிய நிலையில், அதற்கு இவ்வளவு கால அவகாசம் அவசியமா என, ராணுவம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் நிர்வாகம் மட்டுமே கொள்கை முடிவுகளை எடுக்க சட்டப்பூர்வ அதிகாரம் கொண்டிருக்கும் பட்சத்தில், அந்த பணிக்கு இடைக்கால அரசு பொருத்தமாக இருக்காது என்றும் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த ஆண்டுக்குள் அந்நாட்டின் பொதுத்தேர்தலை நடத்தும்படி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்களிடையே முகமது யூனுஸ் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “வங்கதேசத்தின் பொதுத்தேர்தலை நடத்தும்படி அனைத்து கட்சியினருடன் விவாதிக்கப்பட்டது. ''இத்தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரலின் முதல் பாதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செயல்திட்டத்தை, தேர்தல் கமிஷன் வரும் மாதங்களில் துவங்கும்” என குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் ஆட்சி கவிழ நாங்கள் தான் காரணம்.. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஆணவம்..!