இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!
இப்போதுதான் விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. பிறகு, டிரம்ஸ் எல்லாம் நாங்க சேர்ந்து அடிப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ஆம் தேதி மதுரைக்கு வருகை தரவுள்ளதாக அறிவித்தார். முன்னதாக பிப்ரவரி 28-ஆம் தேதி வருவதாக இருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்ச்சி தமிழக மக்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்றும், ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் இது அமையும் என்றும் அவர் விளக்கினார். மதுராந்தகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாநாட்டு அளவுக்கு சிறப்பாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட நயினார், என்டிஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஜி.கே. வாசன், டிடிவி தினகரன், நீதிக்கட்சி தலைவர் சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட பல கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் ஆதரவு தருவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!” மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!
திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், மத்திய பட்ஜெட்டில் செமி கண்டக்டர் திட்டத்துக்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதற்கும் தேவைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் விளக்கினார். மாவட்டத்துக்கு தனியாக பட்ஜெட் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், ஒட்டுமொத்த தேவைகளை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் மீது பாஜக பாகுபாடு காட்டுவதாக எழும் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த நயினார், தமிழக பாஜகவின் சிறுபான்மை மாநிலத் தலைவர் ஜான்சன் இருப்பதையும், திருநெல்வேலியில் சிறுபான்மையினர் மாநில மாநாடு நடைபெறவிருப்பதையும் சுட்டிக்காட்டினார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கையுடன் பாஜக செயல்படுவதாகவும், கடந்த 11 ஆண்டு ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்படுவதாகவும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் போது, நடிகர் விஜய் தொடர்பான வருமான வரி ஏய்ப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார், நீதிமன்றம் விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை தவறு என்று கூற முடியாது என்றார். "இப்போதுதான் விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இனி நாங்கள் அனைவரும் சேர்ந்து டிரம்ஸ் அடிப்போம்" என்று நகைச்சுவையுடன் கூறி, சிரித்தபடி சென்றார். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகம்! - விமான நிலையத்தில் துர்கா ஸ்டாலினை சந்தித்த நயினார் நாகேந்திரன்