×
 

விண்வெளித் துறையில் புதிய வரலாறு..!! ராக்கெட் பூஸ்டரை கடலில் தரையிறக்கி அசத்திய சீனா..!!

ராக்கெட் பூஸ்டரை மீட்டெடுக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக வெற்றி பெற்ற இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது சீனா.

சீனா விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைத்துள்ளது. நிலவு ஆய்வுத் திட்டத்திற்கான முக்கிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்ட சீனா, மீண்டும் பயன்படுத்தக்கூடிய லாங் மார்ச்-10பி ராக்கெட்டின் முதல் கட்ட பூஸ்டரை வெற்றிகரமாக ஏவி, கடலில் பாதுகாப்பாக மீட்டெடுத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்குப் பிறகு இத்தகைய தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

நேற்று (ஜூலை 10) ஹைனான் மாகாணத்தின் வென்சாங் வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து காலை 12:15 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. சுமார் 63.6 மீட்டர் உயரமுள்ள, ஏழு YF-100K கெரோசின் எஞ்சின்களால் இயக்கப்படும் இந்த இரண்டு கட்ட ராக்கெட், 7,60,000 கிலோ எடையுடன் புறப்பட்டு, CX-26 என்ற செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. ஏவுதலுக்குப் பிறகு சுமார் ஆறு நிமிடங்களில் பூஸ்டர் பிரிந்து, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் திரும்பி, தென் சீனக் கடலில் மிதக்கும் ‘லிங்ஹாங்ஜே’ (Linghangzhe) என்ற மீட்புக் கப்பலில் பொருத்தப்பட்ட நெட் மூலம் பிடிக்கப்பட்டது.

இந்த மீட்பு முறை உலகிலேயே முதன்முறையாக வெற்றி பெற்ற நெட்-கேப்சர் சிஸ்டம் ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் போன்று லேண்டிங் லெக்ஸ் பயன்படுத்தாமல், ஹுக்குகளுடன் கூடிய பூஸ்டர் நெட்டில் பாதுகாப்பாக தொங்கவிடப்பட்டது. இது சீனாவின் முந்தைய முயற்சிகளில் தோல்வியுற்ற லேண்டிங் லெக் முறையிலிருந்து வேறுபட்ட முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: சீனாவுக்கு தற்காலிக விலக்கு: மத்திய அரசின் மின் திட்ட டெண்டர்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி!

பொதுவாக ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ஒவ்வொரு ஏவுதலும் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. ஆனால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் மூலம் செலவுகளை பெருமளவு குறைக்க முடியும். ஸ்பேஸ் எக்ஸ் 2015-ல் ஃபால்கன்-9 ராக்கெட்டை முதன்முதலில் தரையிறக்கி, தற்போது ஆண்டுக்கு 150க்கும் மேற்பட்ட ஏவுதல்களை மேற்கொள்கிறது. ப்ளூ ஒரிஜின் நிறுவனம் 2025-ல் நியூ க்ளென் ராக்கெட்டுடன் இந்தத் தொழில்நுட்பத்தில் இணைந்தது. இப்போது சீனாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

லாங் மார்ச்-10பி ராக்கெட், சீனாவின் நிலவு மனிதப் பயணத் திட்டத்திற்கு (மெங்ஜோவ் விண்கலம்) முக்கியப் பங்கு வகிக்கும். மீட்டெடுக்கப்பட்ட பூஸ்டரை இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சாதனை சீனாவின் விண்வெளித் திட்டத்தை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு புது தலைவலி..! பிரம்மபுத்திரா மீது சீனாவின் பிடி...! அணைக் கட்ட ஆர்வம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share