அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!
மத்தியஸ்த முயற்சியின் இறுதி நேரத்தில் சீனாவின் மூத்த வெளியுறவு அதிகாரி ஒருவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் முன்வைத்த திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
புதுடில்லி/தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடங்க இருந்த நிலையில், சீனாவின் செல்வாக்கால் கடைசி நேரத்தில் போர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு வார காலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கின. பதிலுக்கு ஈரான், உலக கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கின.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் உட்கட்டமைப்புகளை மொத்தமாக அழிப்போம்” என்று எச்சரித்து 48 மணி நேர காலக்கெடு விதித்தார். இது உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 3 வார போரில் அமெரிக்கா வெற்றி! ட்ரம்ப் மார்தட்டல்!! அணு ஆயுதம் வைத்திருக்க போவதில்லை என ஈரான் ஒப்புதல்?!!
இந்நிலையில், பாகிஸ்தான் தீவிர மத்தியஸ்தம் செய்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகியோர் அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஒரே இரவில் தொடர்ச்சியாக பேசினர்.
ஆனால், ஈரானை போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்க வைத்த முக்கிய சக்தி சீனா என தெரியவந்துள்ளது. டிரம்ப் “ஒரு நாகரிகமே அழியப் போகிறது” என்று எச்சரித்த சில மணி நேரங்களில், சீன வெளியுறவு அதிகாரிகள் ஈரானுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி, தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஈரானை சம்மதிக்க வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதி அளிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அமெரிக்கா இதை பேச்சுக்கான அடிப்படையாக ஏற்றது.
பாகிஸ்தானின் முயற்சியின் இறுதி கட்டத்தில் சீனாவின் மூத்த வெளியுறவு அதிகாரி ஒருவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸை தொடர்பு கொண்டு, பாகிஸ்தான் முன்வைத்த திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார். இறுதியில் டிரம்ப் இரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
இந்த சம்பவம் உலக அரங்கில் சீனாவின் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்தமும், சீனாவின் தலையீடும் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு அதிகாரி ராஜினாமா! அதிபர் ட்ரம்புக்கு பெரும் பின்னடைவு!