கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!
சீன அதிபரின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மீண்டும் சீரமைப்பதில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தரப்புகள் தெரிவிக்கின்றன. இது 2019 அக்டோபரில் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டிற்குப் பிறகு அவரது முதல் இந்திய பயணமாகும்.
2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீண்டகாலம் பதட்டமாக இருந்த நிலையில், இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சமீபத்திய மாதங்களில் எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவதற்கான உடன்பாடுகள் மற்றும் ரோந்துப் பணிகள் தொடர்பான சுமூக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக இருதரப்பு இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் திசையில் நகர்வுகள் தொடங்கியுள்ளன. பிரிக்ஸ் மாநாட்டின் கருப்பொருள் “நிலைத்தன்மை, புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைபேறு” என்பதாக அமைந்துள்ளது. இந்தியா பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், இந்த மாநாடு உலகளாவிய தென் நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய தளமாக அமையும்.
இதையும் படிங்க: நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. மாநாட்டின் ஓரங்களில் பிரதமர் நரேந்திர மோடி உடன் இருதரப்பு சந்திப்புகள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த பயணம், எல்லைப் பிரச்சினைகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதிக்கும் வாய்ப்பை வழங்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீன அதிபரின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??