×
 

கலவர பூமியாகும் லாஸ் ஏஞ்சல்ஸ்.. கடைகளில் புகுந்து திருடும் கும்பல்.. இரவு நேர ஊரடங்கு அமல்..

அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நட வடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வரும் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை 2வது முறை அதிபரானதும் டொனால்டு ட்ரம்ப் தீவிரப்படுத்தினார். அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல இடங்களில் குடியேற்ற துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி  அதிரடி சோதனை நடத்தி, சட்டவிரோதமாக தங்கியிருந்த 100க்கு மேற்பட்ட வெளிநாட்டவரை கைது  செய்து சிறையில் அடைத்தனர். 

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாஸ்க் அணிந்த நபர்கள் லாஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக  ஜனநாயக கட்சியினரும் களத்தில் குதித்துள்ளனர். இதனால் சில இடங்களில் போராட்டக்காரரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது வர்த்தகப்போர்.. அமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தை சக்சஸ்.. கை குலுக்கிக்கொண்ட 'பெரியண்ணன்கள்'

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். மேலும், லாஸ் ஏஞ்சலீஸில் அந்நகர நிர்வாகம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேரை லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இதில், 330 பேர் உரிய ஆவணங்களின்றி குடியேறியவர்கள் எனவும், 157 பேர் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், போராட்டத்திலிருந்து கலைய மறுத்த 203 பேரும், ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, கலிஃபோர்னியா ஆளுநரின் எதிர்ப்பை மீறி, சுமார் 4,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களையும், ராணுவத்தின் ‘மரைன்’ பிரிவைச் சேர்ந்த 700 வீரர்களையும் அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார். இந்தப் போராட்டச் சூழலைப் பயன்படுத்தி சிலர் அங்குள்ள ஆப்பிள் ஸ்டோர் மற்றும் முக்கிய வணிக வளாகங்களுக்குள் முகமூடி அணிந்துகொண்டு புகுந்து, அங்குள்ள கடைகளைச் சேதப்படுத்தி விலையுயர்ந்த பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவுநேர ஊரடங்கு உத்தரவை மேயர் கரேன் பாஸ் பிறப்பித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, நாச வேலையைத் தடுக்கவும். கொள்ளை அடிக்கப்படுவதைத் தடுக்கவும், உள்ளூர் அவசர நிலையை அறிவித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். போராட்டங்கள் நடந்த பகுதியை உள்ளடக்கிய நகர மையபகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றார். இத்துடன், அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் மட்டுமின்றி, ஆஸ்டின், சிகாகோ, டல்லாஸ், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும்  பரவி வருகிறது.

இதையும் படிங்க: கொதிக்கும் அமெரிக்கா.. ராணுவத்தை இறக்கி அடக்குவேன்.. போராட்டக்காரர்களுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share