கமேனிக்கு டார்கெட்..? தனக்கு பிறகு யார்..? 3 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்த ஈரான் தலைவர்..!
போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் 3 வாரிசுகளை அறிவித்தார் ஈரான் தலைவர் அலி கமேனி.
ஈரான் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய இஸ்ரேல், ஆபரேஷன் ரைசிங் லயன் (எழுச்சி பெறும் சிங்கம்) என்ற பெயரில் ஈரான் மீது கடந்த வாரம் தாக்குதல் தொடுத்தது. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது.
ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3" என்ற பெயரில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இதையும் படிங்க: தொடரும் இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!
இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ‘ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஈரானின் அண்டை நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒருவர் (ஈராக்கை சேர்ந்த சதாம் உசேன்), இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், அவருக்கு நேர்ந்த கதியை எண்ணிப் பாருங்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இனியும் உயிரோடு விட்டு வைக்க மாட்டோம் என இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இந்த சூழலில் பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள கமேனி, இஸ்ரேல் உடனான போரில் நான் கொல்லப்பட்டால் தனக்கு பிறகு யார் ஈரானின் தலைமை மதகுருவான இருக்கலாம் என மூவரை பரிந்துரைத்துள்ளார. தேர்வு செய்யப்பட்ட மூவரில் கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த முடிவை ஈரானின் நிபுணர்கள் சபை மற்றும் மூத்த மதத் தலைவர்களிடம் தெரிவித்தார். தேவைப்பட்டால் விரைவான மாற்றத்திற்குத் தயாராக இருக்குமாறு வலியுறுத்தினார். இந்த நடவடிக்கை போர்க்கால அவசரத்தால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது
சாதாரண சூழ்நிலைகளில், ஒரு புதிய உச்ச தலைவரை நியமிக்கும் செயல்முறை பல மாதங்கள் ஆகலாம். இதில் தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். பல வேட்பாளர்கள் கலந்துகொள்ள முடியும். ஆனால், நாடு இப்போது போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்லாமிய குடியரசு மற்றும் அவரது மரபு இரண்டையும் பாதுகாக்க விரைவான மாற்றத்தை உறுதி செய்ய கமேனி விரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்த மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் உலகமே அடுத்து ஈரானில் என்ன நடக்கும் என்பதையே கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: காசா, ஈரான் மீதான தாக்குதல்.. இந்தியா அமைதி காக்கக்கூடாது.. சோனியா காந்தி கருத்து..!