×
 

"திருமண மேடை தான் திமுகவின் பிரச்சார மேடை" - முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சுக்கு எழிலன் நாகநாதன் பதிலடி!

திமுகவைப் பொறுத்தவரை திருமண மேடைகள்தான் எங்களின் பிரச்சார மேடைகள்; இது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்று திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரை திருமண மேடைகள்தான் எங்களின் பிரச்சார மேடைகள். இது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்; ஸ்கிரிப்ட் பார்த்துப் படிப்பவர்களுக்கு எப்படி வரலாறு தெரியும்? என்று திமுக மருத்துவரணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான எழிலன் நாகநாதன் முதலமைச்சர் விஜய்யை மிகக் காட்டமாக விமரிசித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எழிலன் நாகநாதன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் இதோ:

வழக்கமாகப் பிரதமரைச் சந்திக்கும் முதலமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதுதான் மரபு. ஆனால், டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்தபோது ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அவசர அவசரமாகக் காரில் ஏறிச் சென்றது ஏன் என்று எழிலன் கேள்வி எழுப்பினார். மேலும், "ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பிறகும், இன்னும் பழைய பரப்புரை யுக்தியையே (Narrative) முதலமைச்சர் கையாண்டு வருகிறார்; மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதை அவர் உணர வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "காங்கிரஸ் அமைச்சரவையில் அமர மாணிக்கம் தாகூரே காரணம்!" - அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம்!

"ஆட்சி அமைத்த அடுத்த நாளே சட்டம் ஒழுங்கைச் சரிசெய்வேன் என்று கூறினீர்கள். ஆனால், இந்த ஒரு மாத காலத்தில் எத்தனை பாலியல் குற்றங்கள் மற்றும் ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன?" என்று கேள்வி எழுப்பிய அவர், முன்பு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் எழுப்பிய கேள்விகள் இப்போது "பூமராங்" போல அவருக்கே திரும்பி வருவதாகவும், தற்போது அவகாசம் கேட்பது வேடிக்கையாக இருப்பதாகவும் சாடினார்.

"மாதம் ஒருமுறை மின் கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்றீர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக என்ன செய்தீர்கள்? கொடுப்பது போல் கொடுத்து அனைத்தையும் பறிப்பதுதான் மாற்றமா?" என்று அவர் வினவினார். மேலும், 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்துப் பேசுபவர்கள், 2006-இல் கலைஞர் கருணாநிதி விவசாயக் கடன்களை எப்படி ரத்து செய்தார் என்பதையும் வரலாறு எடுத்துப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "மேகதாது அணை கட்டுவதற்குத் திமுகதான் தடையாக இருந்தது என கர்நாடகாவின் அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகிறார். இது குறித்து முதல்வர் விஜய் தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்" என்றார். மேலும், டெல்லி சென்றபோது முதல்வர் ஏன் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

"ஒவ்வொரு மாவட்ட மக்கள் சந்திப்பின் போதும் புதிய திட்டங்களை அறிவிப்பதே வழக்கம். ஆனால் முதல்வர் விஜய்யின் சந்திப்பு ஒரு ரசிகர் மன்றக் கூட்டம் போலவே நடந்துள்ளது" என்று விமரிசித்த அவர், "சோபா மாடல் அரசு சந்தி சிரிக்கிறது" என்றும் எள்ளி நகையாடினார். ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் எழிலன் நாகநாதன் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share