×
 

”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!

ஜூலை 9-ஆம் தேதி வரை ஈரானின் பல நகரங்களில் இறுதி ஊர்வலமும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ஒரு கருத்து சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், டிரம்பின் இந்தக் கருத்து மீண்டும் அமெரிக்கா - ஈரான் உறவை பதற்றத்தின் விளிம்புக்கு தள்ளியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்ற அமெரிக்க தாக்குதலில் அயேதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்பட்டது. அதன்பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் வெடித்து, இரு நாடுகளும் நேரடி மோதலுக்குள் சென்றன. பின்னர் சர்வதேச நாடுகளின் முயற்சியால் முதல் கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களும் அங்கு திரண்டுள்ளனர். கமேனியின் மூன்று மகன்களும் பொதுமக்கள் அஞ்சலியில் கலந்து கொண்ட நிலையில், புதிய உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி மட்டும் இதுவரை பொதுமக்கள் முன் தோன்றவில்லை.

இதையும் படிங்க: இரண்டு நாட்டு ராணுவத்தை மொத்தமா அழிச்சிட்டோம்! ஒரே ஒரு தாக்குதல் போதும்!! ட்ரம்ப் சுயதம்பட்டம்!

ஜூலை 9-ஆம் தேதி வரை ஈரானின் பல நகரங்களில் இறுதி ஊர்வலமும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் டொனால்டு டிரம்ப் கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமேனியின் இறுதிச்சடங்கில் ஈரானின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பதாக குறிப்பிட்ட அவர், "ஒரே ஒரு குண்டு போதும்... அனைவரையும் ஒரே நேரத்தில் வீழ்த்த முடியும். அப்படி நடந்தால் பேச்சுவார்த்தை நடத்த யாருமே இருக்க மாட்டார்கள். இருப்பினும் ஈரான் தற்போது ஒப்பந்தத்தை விரும்புகிறது. அதனால் இறுதிச்சடங்கு முடியும் வரை பேச்சுவார்த்தையில் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளது. அந்தக் காலகட்டத்தில் எந்தத் தாக்குதலும் நடைபெறாது" என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தக் கருத்து ஈரானில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. டிரம்பின் பேச்சை மனிதாபிமானமற்ற மிரட்டலாக விமர்சித்த ஈரான், அதற்கு மிகவும் காட்டமான பதிலையும் அளித்துள்ளது.

ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட பதிலில், "உடல்களை அழிக்கலாம்; ஆனால் ஒரு சித்தாந்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. வாசனைத் திரவிய பாட்டிலை உடைத்தால் அதன் நறுமணம் எல்லாத் திசைகளிலும் பரவுவது போல, எங்கள் கொள்கைகளும் மக்களின் மனங்களில் தொடர்ந்து வாழும். நாகரிகத்தின் மதிப்பும், வரலாற்றின் ஆழமும், பாரம்பரியத்தின் பெருமையும் அறியாதவர்களால் இதை புரிந்துகொள்ள முடியாது" என்று கடுமையாக சாடப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்துக்குப் பிறகு பதற்றம் குறையும் என உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த வேளையில், டிரம்பின் இந்தக் கருத்தும் அதற்கு ஈரான் அளித்துள்ள ஆவேசமான பதிலும், இரு நாடுகளுக்கிடையேயான வார்த்தைப் போரை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இது எதிர்கால பேச்சுவார்த்தைகளின் போக்கை எந்த திசைக்கு கொண்டு செல்லும் என்ற கேள்வி சர்வதேச அரசியல் வட்டாரத்தில் மீண்டும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மறு அறிவிப்பு வரும் வரை அவசியமற்ற ஈரான் பயணத்தை தவிருங்கள்! இந்தியா எச்சரிக்கை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share