×
 

துருக்கியில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்.. பால்கனி வழியாக குதித்து தப்பிய மக்கள்.. கிரிஸ், சிரியாவிலும் பாதிப்பு..!

துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வு எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது.

நிலநடுக்கம் அபாயமுள்ள நாடான துருக்கியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. துருக்கியின் மர்மாரிஸ் நகரில் 6.2 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. நிலநடுக்கம் மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது. 

கிரீசில் உள்ள தீவான ரோட்ஸ் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து, வீடுகளில் இருந்து வெளியே ஓடினர். நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீடுகள் குலுங்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. தூக்கத்தில் இருந்த பலர் பயத்தில் ஜன்னல்கள் வழியாகவும், பால்கனியில் இருந்தும் எட்டி குதித்தனர். 

இதில் 7 பேர் காயம் அடைந்தனர். பாதிப்புகள் குறித்து அந்நாட்டு அரசு ஆய்வு செய்து வருகிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வு எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. நிலநடுக்கம் அபாயமிகுந்த நாடாக கருதப்படும் துருக்கியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. 

அவற்றில் ஒரு பின்னதிா்வு ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. 

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்தது. அவா்களில் துருக்கியில் 35,418 பேரும், சிரியாவில் 5,800 பேரும் அடங்குவா்; இரு நாடுகளிலும் சோ்த்து சுமாா் 94,770க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கி மீண்டு வர உதவி செய்தன.

துருக்கியின் அங்காரா உள்ளிட்ட இடங்கள் 2023ல் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, 'ஆப்பரேஷன் தோஸ்த்' என்ற மீட்பு நடவடிக்கையை துவங்கி, முதல் நாடாக இந்தியா களம் இறங்கியது.இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க, 'கருடா' ட்ரோன்களையும், மீட்பு பணிகளுக்கு 'சி 17' ரக போர் விமானங்களையும் அனுப்பியது. நம் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் கடந்த மாதமும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் பொருளாதார முக்கிய நகரமான இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும், அத்துடன், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தினால், இஸ்தான்புலில் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதனால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியா கொடுத்த மரண அடியால் பம்மும் பாக்.,

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share