×
 

மத்திய அரசு அவசர எச்சரிக்கை! ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

எபோலா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காங்கோ, உகாண்டா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிவேகமாகப் பரவி வரும் கொடிய எபோலா வைரஸ் (Ebola Virus) அச்சுறுத்தல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் யாரும் காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கு அத்தியாவசியமற்றப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று (மே 24) புதிய அவசரப் பயண ஆலோசனையை (Travel Advisory) அதிரடியாக வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் காங்கோ குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில், கடந்த சில நாட்களாக 'பண்டிபூகியோ' (Bundibugyo) எனப்படும் மிக அரிய வகை எபோலா வைரஸ் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் (சுமார் 216 பேர்) உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை கைமீறிச் செல்வதைக் கவனித்த உலக சுகாதார நிறுவனம் (WHO), சர்வதேச சுகாதார விதிகளின்படி இந்த எபோலா அச்சுறுத்தலை 'சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசர நிலை' (PHEIC) என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது பரவி வரும் இந்த 'பண்டிபூகியோ' எபோலா வைரஸ் வகைக்குச் சந்தையில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ (Vaccines) அல்லது பிரத்யேக மருத்துவச் சிகிச்சைகளோ கிடையாது என்பதுதான் உலக நாடுகளைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் (இரத்தம், உமிழ்நீர், வியர்வை) மூலமாக இந்தத் தொற்று மற்றவர்களுக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது என்பதால், இதன் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

மத்திய அரசின் உத்தரவின் பேரில், இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் மற்றும் அதன் வழியாகத் தங்கி வரும் (Transit) பயணிகளுக்குத் தீவிர மருத்துவக் கண்காணிப்பு (Thermal Screening) மற்றும் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது உடலில் காரணமின்றி இரத்தக் கசிவு போன்ற எபோலா அறிகுறிகள் உள்ளவர்கள், இமிக்ரேஷன் அதிகாரிகளை அணுகும் முன்னரே தங்களை விமான நிலைய மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக இந்தியக் குடிமக்கள் யாரும் இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தங்கியிருக்கும் இந்திய வம்சாவளியினர், உள்ளூர் சுகாதாரத் துறை வழங்கும் வழிகாட்டுதல்களைத் துல்லியமாகப் பின்பற்றி, மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share