இட ஒதுக்கீட்டு இழப்பு பிரச்சனை..!! மருத்துவக் கல்வி விவகாரத்தில் வெடித்த எடப்பாடி பழனிசாமி..!!
மருத்துவ இடங்களில் பின்னடைவு ஏற்படும் என எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி கொள்கையை தீவிரமாக விமர்சித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மருத்துவ இடங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.அறிக்கையில், அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்வித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை வலியுறுத்திய பழனிச்சாமி, 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 1,945 அரசு MBBS இடங்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மொத்தம் 5,500-க்கும் அதிகமான இடங்கள் உயர்த்தப்பட்டதுடன், 19 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 1,650 MBBS இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவு நனவாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.ஆனால், தற்போதைய ஆட்சியில் இந்த முன்னேற்றம் முற்றிலும் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக பழனிச்சாமி விமர்சித்தார்.
600-க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பல மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்வியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் மருத்துவத் துறை வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: போறவங்க போகட்டும்..! தொண்டர்கள் இருக்காங்க.. மா. செ. கூட்டத்தில் EPS நம்பிக்கை..!
“மக்களின் உயிர் மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்கும் மருத்துவத் துறையில் அரசு அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்த பழனிச்சாமி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை மீண்டும் வலுப்படுத்த அதிமுக உறுதியாக உள்ளதாக வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்வித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இறங்கிய பேரிடி..! கட்சியிலிருந்து விலகிய வைகைச் செல்வன்..! அதல பாதாளத்தில் அதிமுக..!!