எத்தியோப்பியாவில் ஒலித்தது வந்தே மாதரம் பாடல்!! உற்சாகத்துடன் கைதட்டி ரசித்த பிரதமர் மோடி!
எத்தியோப்பியாவில் நடந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் ஒலித்ததும் பிரதமர் மோடி கை தட்டி உற்சாகத்துடன் கண்டு களித்தார்.
அடிஸ் அபாபா: இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' எத்தியோப்பியாவில் ஒலித்து இந்தியர்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. எத்தியோப்பியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் எத்தியோப்பிய பாடகர்கள் குழு 'வந்தே மாதரம்' பாடலை அழகாகப் பாடினர். இப்பாடல் தொடங்கியதும் பிரதமர் மோடி உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தார். பின்னர் முழு மகிழ்ச்சியுடன் பாடலை ரசித்து கேட்டார்.
இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உடனடியாக வைரலாகியுள்ளது. லட்சக்கணக்கானோர் இதைப் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இப்பாடல் ஒலித்தது இந்தியர்களுக்கு பெரும் பெருமையையும் நெகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “பிரதமர் அபி அகமது அலி ஏற்பாடு செய்திருந்த நேற்றைய இரவு விருந்து நிகழ்ச்சியில் எத்தியோப்பிய பாடகர்களால் அற்புதமாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது. இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நேற்று மோடி! இன்று அமித் ஷா! வந்தே மாதரம் 150 விவாதம்! காங்கிரசை வச்சு செய்யும் பாஜக!
எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி டிசம்பர் 16 அன்று சென்றடைந்தார். அடிஸ் அபாபா விமான நிலையத்தில் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி நேரில் வந்து ஆரத்தழுவி வரவேற்றார். அரிதான கௌரவமாக, அபி அகமது அலி தானே காரை ஓட்டி பிரதமர் மோடியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்தில் பாரம்பரிய காபி விழாவும் நடத்தப்பட்டது.
At yesterday’s banquet dinner hosted by Prime Minister Abiy Ahmed Ali, a wonderful rendition of Vande Mataram was sung by Ethiopian singers. It was a deeply moving moment, that too at a time when we are marking 150 years of Vande Mataram. @AbiyAhmedAli pic.twitter.com/TeHbPzBBLb
— Narendra Modi (@narendramodi) December 17, 2025
பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இந்தியா எத்தியோப்பிய மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையை இரட்டிப்பாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்பு மற்றும் கலாசாரத் தொடர்புகளை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலித்தது இந்திய-எத்தியோப்பிய உறவுகளின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நேருவை மட்டும் ஏன் டார்கெட் பண்ணுறீங்க?! மோடி, அமித் ஷாவுக்கு கார்கே கறார் கேள்வி!!