போர் பதற்றம்.. தன்னை சந்திக்க வர வேண்டாம்..! கழகத் தொண்டர்களுக்கு இபிஎஸ் அன்பு கட்டளை..!
போர் பதற்றம் நீடித்து வருவதால் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல கழகத் தொண்டர்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலை இந்தியா தகர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாது பதிலடி தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை கதி கலங்க செய்துள்ளது. இந்த நிலையில் திறம்பட செயல்பட்டு வரும் ராணுவ வீரர்களுக்கும் இந்திய அரசுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை கூறி பெருமிதம் தெரிவித்து பேசி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு ஒன்றில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா Operation Sindoor நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள்.
இதையும் படிங்க: குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன். நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 4 வருஷத்துல சொல்ல ஒரு நல்ல திட்டம் இல்ல... இதெல்லாம் ஒரு ஆட்சியா? - ஸ்டாலினை பொளந்தெடுத்த எடப்பாடி!