×
 

கைதான 11 மணி நேரத்தில் விடுதலை!! பாலியல் குற்றவாளி எப்ஸ்டினுடன் தொடர்பு! பிரிட்டன் மன்னர் சகோதரர் விடுவிப்பு!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் மீண்டும் உலகை உலுக்குகிறது. அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கி, பல முக்கிய புள்ளிகளுக்கு அவர்களை 'விருந்தாக' அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2019இல் அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது ஆவணங்கள் தொடர்ந்து வெளியாகி, உலக அரசியல் மற்றும் ராயல் குடும்பங்களை பாதித்து வருகின்றன.

இந்த வரிசையில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் இளைய சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (66) கைது செய்யப்பட்டார். தேம்ஸ் வேலி போலீசார், அவரது 66வது பிறந்தநாளன்று (பிப்.19, 2026) சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள வுட் ஃபார்ம் வீட்டில் கைது செய்தனர். 

எப்ஸ்டீன் ஆவணங்களில், ஆண்ட்ரூ 2001-2011 வரை பிரிட்டன் அரசின் சிறப்பு வர்த்தக தூதராக (UK Special Representative for International Trade) பணியாற்றியபோது, ரகசிய அரசு ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதற்கான ஆதாரங்கள் (மின்னஞ்சல்கள் உட்பட) கிடைத்துள்ளன.

இதையும் படிங்க: உலகை உலுக்கிய எப்ஸ்டீன் பாலியல் வழக்கு!! அரசு குடும்பத்திற்கு சம்பந்தமா? பிரிட்டன் மன்னரின் சசோதரர் கைது?!

இதனால் 'misconduct in public office' (பொது பதவியில் தவறு செய்தல்) என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இது பிரிட்டன் வரலாற்றில் ஒரு மூத்த ராயல் உறுப்பினர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம். 

ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் காரணமாக அவரது 'இளவரசர்' பட்டம், 'டியூக் ஆப் யார்க்' உள்ளிட்ட அரச பட்டங்கள் பறிக்கப்பட்டன. விர்ஜீனியா கியூஃப்ரே உள்ளிட்டோரின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளாலும் சர்ச்சையில் இருந்தார்.

11 மணி நேர விசாரணைக்குப் பின், அவரை 'under investigation' என்ற நிலையில் விடுவித்தனர். குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை, ஆனால் விசாரணை தொடர்கிறது. பெர்க்ஷயரில் உள்ள ராயல் லாட்ஜ் மற்றும் நார்போக் பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் ராயல் குடும்பத்துக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மன்னர் சார்லஸ் "சட்டம் தன் போக்கில் செல்லட்டும்" என அறிக்கை வெளியிட்டார். எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்ந்து வெளியாவதால், பல உலக தலைவர்கள் மீது விசாரணை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டன் அரசியல் மற்றும் ராயல் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: உலகை உலுக்கிய எப்ஸ்டீன் பாலியல் வழக்கு!! அரசு குடும்பத்திற்கு சம்பந்தமா? பிரிட்டன் மன்னரின் சசோதரர் கைது?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share