×
 

ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் உண்டு; பிரச்னைக்கு முக்கிய மூல காரணம் ஈரான் நாடு தான் என்று ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருப்பதாக கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. தங்கள் நாட்டை பரம எதிரியாக கருதும் ஈரான், அணுகுண்டு தயாரித்து விட்டால், அது தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதலில் நடத்தி வருகிறது.

ஈரானின் அணு உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஈரான், தனது அணு உற்பத்தி கூடங்களின் முக்கிய கட்டமைப்புகளை இழந்தது.

அதே போல் ராணுவ தளங்களிலும் மிகப்பெரிய சேதம். கொத்து கொத்தாக வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும், ஈரானின் அனைத்து வடிவிலான ராணுவத்தின் தலைமை தளபதி முகமது ஹூசைனை இந்த தாக்குதலில் இஸ்ரேல் கொன்று விட்டது. இது தவிர இரண்டு முக்கிய படை பிரிவின் தலைமை தளபதிகளும், 2 முக்கிய அணு விஞ்ஞானிகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

கடந்த 4 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 370க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவ, தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அமெரிக்க துணை தூதரக கட்டடம் ஈரான் தாக்குதலில் சேதம் அடைந்தது. இருநாடுகளின் ராணுவமும் அதிரடி தாக்குதல்களை இரவிலும் அரங்கேற்றி வருவதால் யுத்தம் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.

இந்நிலையில், டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார். இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான மோதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கி உள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறி உள்ளார். ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;

இருநாடுகளும் சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர், இரு நாடுகளிடமும் ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளார். அதன் மூலம் போர் நிறுத்தம் செய்து கொள்வதற்கான பரந்துபட்ட விவாதங்கள் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை இருநாடுகளும் பின்பற்றுமா என்று நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதும் மிகவும் முக்கியமானது. பயங்கரவாதம் மற்றும் பிராந்திய அமைதியின்மைக்கு முக்கிய மூல காரணமாக ஈரான் உள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share